ஐடி ஊழியர்களுக்கு புது தலைவலி.. இனி 10 மணி நேரம் வேலை.. கர்நாடக அரசு கொண்டு வரும் ரூல்ஸ்

Karnataka Working Hours : கர்நாடகாவில் ஐடி ஊழியர்களுக்கான வேலை நேரத்தை 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த அம்மாநில அரசு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இதற்கு ஐடி தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடகா அரசின் இந்த திட்டத்தை நவீன காலத்தின் அடிமைத்தனம் எனவும் கூறி வருகின்றனர்.

ஐடி ஊழியர்களுக்கு புது தலைவலி.. இனி 10 மணி நேரம் வேலை..  கர்நாடக அரசு கொண்டு வரும் ரூல்ஸ்

ஐடி ஊழியர்கள்

Updated On: 

19 Jun 2025 19:47 PM

பெங்களூரு, ஜூன் 19 : கர்நாடகாவில் ஐடி ஊழியர்களுக்கான (IT Employees) வேலை நேரத்தை (Karnataka Working Hours) அதிகரிக்க அம்மாநில அரசு (Karnataka Goverment) திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நடவடிக்கை தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதிக்கும் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலையை மோசமாக்கும் என தொழிற்சங்கங்கள் கூறி வருகின்றன. கர்நாடக நிறுவனங்கள் சட்டம் 19691-ஐ திருத்த கர்நாடக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் தற்போது ஐடி ஊரியர்கள் 9 மணி நேரம் வேலை பார்த்து வருகின்றனர். இந்த சட்டத்தில் கர்நாடக அரசு திருத்தம் மேற்கொள்ளும் பட்சத்தில், ஐடி ஊழியர்களுக்கான வேலை நேரம் 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக உயர்த்தக்கூடும்.

தினசரி 10 மணி நேரம் வேலை

கூடுதல் நேரம் வேலை பார்த்தாலும் 1 மணி நேரம் என்பதை தற்போது சட்டத்தில் உள்ளது. இதன் மூலம் மூன்று மாதங்களில் அதிகபட்சமாக 50 மணி நேரம் அதிக நேரம் வேலை பார்க்க அனுமதிக்கிறது. ஆனால், இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டால் தினசரி 10 மணி நேரமும், அதிகமாக 12 மணி நேரம் வேலை செய்ய வழிவகுக்கும்.

மூன்று மாதங்கள் அனுமதிக்கப்படும் அதிகபட்ச வேலை நேரமும் 50 மணி நேரத்தில் 144 மணி நேரமாக அதிகரிக்கலாம். சமீபத்தில் தான் ஆந்திராவில் வேலை நேரம் 10 மணி நேரமாக அதிகரிக்க அனுமதித்தது. முதலீட்டை அதிகரிக்க ஆந்திரா அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

எதிர்க்கும் தொழிற்சங்கங்கள்

ஆந்திரப் பிரதேசத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே. பார்த்தசாரதி, தொழிலாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் தொழிலாளர் சட்டங்களை மிகவும் நட்பானதாக மாற்ற மாநிலம் விரும்புகிறது என்று கூறினார். இதுகுறித்து பேசிய இவர், “முன்பு இரவில் வேலை செய்ய அனுமதிக்கப்படாத பெண்கள், இப்போது வேலை செய்து வருகின்றனர். கூடுதலாக வேலை செய்யும்போது, ​​வருமானம் அதிகரிக்கும்.

இந்த விதிகள் மூலம், பெண்கள் முறையான துறையில் பணியாற்ற முடியும். அவை பெண்களுக்கு பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிக்கின்றன. தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும்” என்று கூறினார். இந்த சூழலில் தான், இந்தியா டூடே தகவலின்படி, கர்நாடகாவிலும் வேலை நேரத்தை 10 மணி நேரமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தொழிற்சங்ககள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கர்நாடக மாநில ஐடி ஊழியர்கள் சங்கம் கூறுகையில், “10 மணி நேரம் வேலை நவீன கால அடிமைத்தனம். இது தொழிலாளர்களின் உடல்நலம், வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் வேலைப் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும். இந்த நடவடிக்கைக்கு ஐடி ஊழியர்களுககு ஒன்றிணைத்து எதிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த கூடுதல் வேலை நேரம் குறித்து கர்நாடக அரசு இன்னும் முடிவு எடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தொழிற்சங்ககளுடன் ஆலோசனை பெற்ற பிறகே, கர்நாடக அரசு இறுதி முடிவை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.