Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 கருப்பு பெட்டி.. என்ன காரணம்?

Air India Plane Crash: விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி தரவுகளை பெற அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் கடுமையான சேதம் அடைந்ததன் காரணமாக இந்தியாவில் தரவுகளை பெற முடியாத காரணத்தால் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 கருப்பு பெட்டி.. என்ன காரணம்?
விபத்துக்குள்ளான விமானம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 19 Jun 2025 11:48 AM

ஏர் இந்தியா விமான விபத்து: விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787 (Air India Boeing 787) விமானத்தின் கருப்புப் பெட்டியை (Black Box)ஆய்வுக்காக அமெரிக்காவிற்கு இந்தியா அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்குப் பிந்தைய தீ விபத்தில் ரெக்கார்டருக்கு வெளிப்புற சேதம் ஏற்பட்டதால், இந்தியாவில் தரவைப் பெறுவது சாத்தியமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தரவுகள் வாஷிங்டனை தளமாகக் கொண்ட தேசிய பாதுகாப்பு போக்குவரத்து வாரியத்தின் (NTSB) ஆய்வகத்தில் பிரித்தெடுக்கப்படும் என்றும் , சர்வதேச விதிகளின் கீழ், சம்பவத்தின் நிலை விசாரணை செய்யும் பொறுப்பை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துடன் (AAIB) பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து தரவுகள் பெறப்படும்:

அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், “ கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் AAIB ஒரு ஆய்வகத்தை நிறுவியிருந்தாலும், அதிக சேதத்தை சந்தித்த ரெக்கார்டர்களில் இருந்து தரவைப் பிரித்தெடுக்க இன்னும் முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை” என தெரிவித்துள்ளார். 53 பிரிட்டிஷ் குடிமக்கள் இருந்ததால், ஐக்கிய இராச்சியத்தின் விமான விபத்துகள் புலனாய்வுப் பிரிவும் இடம் பெரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்:


அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நொடிகளில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது, விமானத்தில் 241 பேரும், தரையில் 33 பேர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருக்கும், விமானத் தரவுப் பதிவி மற்றும் காக்பிட் வாயிஸ் ரெக்காடர் (CVR) கருப்புப் பெட்டிகளாக கருதப்படுகிறது.

பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் வரையப்பட்ட இவை, தீவிர சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் வால் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளன, ஏனெனில் அந்த பகுதி விபத்தின் போது மிகக் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் விபத்தின் தாக்கம் அல்லது அதன் பிறகு ஏற்படும் தீ விபத்து காரணமாக கடுமையான சேதங்கள் ஏற்படுவது பொதுவானது.

கருப்பு பெட்டியின் முக்கியத்துவம் என்ன?

விமானத்தின் கருப்புப் பெட்டிகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட தரவு, விபத்தின் விசாரணைகளில் மிக முக்கியமானது, ஏனெனில் விமானத் தரவுப் பதிவி நேரம், உயரம் மற்றும் வான் வேகம் போன்ற பல விஷயங்கள் பற்றிய நுண்ணறிவை வழங்கும்.

விமானி உரையாடல்கள் மற்றும் காக்பிட்டில் உள்ள மின்னணு அமைப்புகளிலிருந்து வரும் எந்த எச்சரிக்கை செய்தி, சுற்றுப்புற சத்தம் உட்பட, காக்பிட்டிலிருந்து முக்கியமான ஆடியோ பதிவுகளை CVR-ல் இருந்து கிடைக்கும். ரெக்கார்டரிலிருந்து தரவைப் பிரித்தெடுக்க, சேதத்தின் அளவைப் பொறுத்து இரண்டு நாட்கள் முதல் மாதங்கள் வரை ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.