இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்.. 6 மாத லிவ்-இன் வாழ்க்கை.. இறுதியில் கொலையில் முடிந்த சோகம்!!
கொலை செய்த பின்னர், யாரிடமும் சொல்லாமல் இரண்டு நாட்களாக உடலோடு அதே வீட்டில் சரத் தங்கியிருந்துள்ளார். கொலையில் இருந்து தப்ப முடியாத சூழலில், சட்ட ரீதியாக இதிலிருந்து எப்படித் தப்பிப்பது என ஆலோசிப்பதற்காகத் திங்கட்கிழமையன்று (ஜூன் 15) ஒரு வழக்கறிஞரைச் சந்தித்து, தான் செய்த கொடூரக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
கர்நாடகா, ஜுன் 17: பெங்களூருவின் மல்லேஸ்வரம் பகுதியில், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் ஒன்றாக வாழ்ந்து வந்த தனது 20 வயது காதலியை, காதலனே கழுத்தை நெரித்துக் கொடூரமாகப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை இரவு நடந்த இந்த கொலையை, இரண்டு நாட்களுக்குப் பிறகு கொலையாளி தனது வழக்கறிஞரிடம் ஒப்புக்கொண்டதை அடுத்து, வழக்கறிஞர் கொடுத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்க: மது கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்து புகைப்படம் எடுத்து கட்டாய மதமாற்றம்.. இந்திய விமானப்படை அதிகாரியின் மனைவிக்கு நடந்த கொடூரம்!
இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்:
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின்படி, கொலையுண்ட இளம்பெண் அனுஷா (20) மற்றும் கொலையாளி சரத் (27) ஆகிய இருவரும் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்திலுள்ள சக்லேஷ்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களுக்கு இடையே சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலமாக முதலில் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் தீவிர காதலாக மாறியுள்ளது. பெற்றோருக்குத் தெரியாமல் காதலை வளர்த்து வந்த இந்த ஜோடி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்தது. மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருவரும் தங்களை இணைத்துக் கொண்டு ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளனர். கைதான சரத் பெங்களூரு நகரில் தண்ணீர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார்.
சனிக்கிழமை இரவு நேர்ந்த கொடூரம்:
கடந்த சில நாட்களாகவே இவர்களுக்குள் தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரங்கள் தொடர்பாகத் தொடர் வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, கடந்த சனிக்கிழமை இரவு (ஜூன் 13), வழக்கம்போல் இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான தகராறு வெடித்தது. இந்த வாக்குவாதம் எல்லை மீறிச் செல்லவே, ஆத்திரமடைந்த சரத், அனுஷாவின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
வழக்கறிஞர் கொடுத்த தகவல்:
கொலை செய்த பின்னர், யாரிடமும் சொல்லாமல் இரண்டு நாட்களாக உடலோடு அதே வீட்டில் சரத் தங்கியிருந்துள்ளார். கொலையில் இருந்து தப்ப முடியாத சூழலில், சட்ட ரீதியாக இதிலிருந்து எப்படித் தப்பிப்பது என ஆலோசிப்பதற்காகத் திங்கட்கிழமையன்று (ஜூன் 15) ஒரு வழக்கறிஞரைச் சந்தித்து, தான் செய்த கொடூரக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். சரத் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த வழக்கறிஞர், அவருக்கு உதவ மறுத்ததோடு, சற்றும் தாமதிக்காமல் உடனடியாக இதுகுறித்து பெங்களூரு போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தார்.
போலீசார் அதிரடி நடவடிக்கை:
வழக்கறிஞர் கொடுத்த தகவலின் பேரில், சேஷாத்ரிபுரம் காவல் நிலைய போலீசார் மல்லேஸ்வரத்தில் உள்ள அந்த வாடகை வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு அழுகிய நிலையில் இருந்த அனுஷாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முறையான சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு அனுஷாவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிக்க: எல் நினோ என்றால் என்ன? அதிகம் பாதிக்கப்படக்கூடிய இந்திய மாநிலங்கள் எவை?
தப்பியோட முயன்ற தண்ணீர் லாரி ஓட்டுநரான சரத்தை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இன்ஸ்டாகிராம் நட்பில் தொடங்கி கொலையில் முடிந்த இந்த கொடூர சம்பவம் குறித்து சேஷாத்ரிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலைக்கான துல்லியமான பின்னணி மற்றும் இருவருக்கும் இடையே என்ன தனிப்பட்ட பிரச்சனை இருந்தது என்பது குறித்து சரத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.