ரசகுல்லாவால் வந்த ரகளை…திருமணத்தில் மணமகன்-மணமகள் குடும்பத்தினர் களேபரம்!
Bride And Groom Families Clash: பீகாரில் ரசகுல்லாவால் மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில், மணமகன் வீட்டார் மீது வரதட்சணை புகார் அளிக்கப்பட்டுள்ளது. மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பீகார் மாநிலம், புத்தகயாவில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே ஏற்பட்ட திடீர் மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புத்தகயாவில் உள்ள ஹோட்டலில் கடந்த நவம்பர் 29- ஆம் தேதி திருமண விழா நடைபற்றது. இந்த விழாவில், மணமகனுக்கும், மணமகளுக்கும் திருமணம் முடிந்த நிலையில், அவர்கள் இருவரும் நெருப்பை சுற்றி ஏழு சுற்றுகள் சென்று வாழ்நாள் முழுவதும் வாக்குறுதிகளை அளிக்கும் சடங்கு நடைபெற்றது.இதைத் தொடர்ந்து திருமண விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. அந்த உணவில் அனைவருக்கும் ரசகுல்லா பரிமாறப்பட்டது.
மேலும் படிக்க: இண்டிகோ விமான ரத்து விவகாரம்…ஊழியர்களுக்கு சிஇஓ திடீர் கடிதம்!




ரசகுல்லா காலியானதால் வந்த ரகளை
ஒரு கட்டத்தில் திருமண விழாவுக்கு வந்தவர்களுக்கு பரிமாறுதற்கு ரசகுல்லா காலியானதாக கூறப்படுகிறது. இதனால், மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அது கைகலப்பாக மாறியது. இதில், இரு வீட்டாரும் நாற்காலிகளை தூக்கி வீசி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து ஹோட்டலின் உரிமையாளர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
ஹோட்டலில் மோதலில் ஈடுபட்ட வீடியோ வைரல்
Chaos After ‘Rasgulla Shortage’ At Bihar Wedding pic.twitter.com/Rks41zJtnq
— Priyanka Koul (@Priyankakaul13) December 3, 2025
மணமகன் குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார்
அப்போது, மணமகனின் குடும்பத்தினர் மீது மணமகளின் குடும்பத்தினர் வரதட்சணை புகார் அளித்த நிலையில், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் யாரும் கைது செய்யப்படாத நிலையில் இது குறித்து காவல் துறையும் பதில் அளிக்கவில்லை. திருமண விழாவில் மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்திலும் ஒரு சம்பவம்
இதே போல உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் கடந்த ஏப்ரல் மாதம் ரிப்பன் வெட்டும் விழாவின் போது ஏற்பட்ட சண்டையில் ஒரு பெண் தனது திருமணத்தை நிறுத்தினார். இந்த மோதலில் இரு தரப்பினரும் கடும் மோதலில் ஈடுபட்டதுடன், தங்களது துணிகளை கிழித்து கொண்டனர். மணமகனின் நண்பர்கள் மணமகளின் உறவினரை தகாத வார்த்தைகளால் கேலி செய்யதன் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்தததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகை – பிரதமர் மோடியுடன் ஒரே காரில் பயணம்