பீகார் சட்டமன்ற தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.. நாளை முதற்கட்ட வாக்குபதிவு..
Bihar Assembly polls: பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியும், இந்தியா கூட்டணியும் கண்கவர் அறிவிப்புகள் கொண்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளனர். அரசு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு உதவித்தொகை என வாக்குறுதிகளை கூறி இருகட்சிகளை சேர்ந்த பெரும் தலைவர்களும் தவீர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

கோப்புப்படம்
பீகார், நவம்பர் 05: பீகாரில் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இறுதி நாளில், முக்கிய தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு 11ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையும் படிக்க : இந்த வகை வாகனங்களுக்கு அனுமதி இல்லை.. டெல்லி அரசு எடுத்த முடிவு!
பீகாரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7 கோடியே 42 லட்சம். இவர்களில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சம். பெண்கள் 3 கோடியே 50 லட்சம் ஆவர். மொத்தம் 90 ஆயிரத்து 712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை நடைபெறும் தேர்தலில் 121 சட்டமன்ற தொகுதிகளில் 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதற்கட்ட தேர்தலில் வாக்களிக்கும் 3.75 கோடி பேருக்காக 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் போட்டியிடும் ராகோபூர் தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பீகாரில் தற்போது நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர களப்பணியாற்றி வருகிறது. அதேசமயம், நிதிஷ்குமாரிடம் இருந்து இந்த முறை ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதாவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸின் மகா பந்தன் கூட்டணி உள்ளது. இங்கு பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியபோதிலும், பாஜக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.
அனல்பறந்த இறுதிகட்ட பிரசாரம்:
இதையொட்டி, கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இறுதி கட்ட பிரசாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிரிதி இரானி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்ளிட்டோர் பங்கேற்று வாக்கு சேகரித்தனர். அதேசமயம், ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில், தேஜஸ்வி யாதவ் போட்டியிடும் ராகோபூர் தொகுதி உட்பட, லாலுபிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ் மஹுவா தொகுதிக்கும், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி போட்டியிடும் தாராபூர் தொகுதிக்கும் நாளை வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.