டெல்லி, ஏப்ரல் 17, 2026: ராகுல் காந்தி மக்களவையில் ஆற்றிய பேச்சு தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. ‘நாரி சக்தி வந்தன்’ உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்கள் குறித்து நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை நினைவுகளை அரசியல் பாடங்களுடன் இணைத்து சுவாரஸ்யமாக பேசினார். தன் சிறுவயதில் இருந்த ஒரு பயத்தை அவர் பகிர்ந்து கொண்டார். “நான் சிறுவயதில் இருட்டுக்கு மிகவும் பயப்படுவேன். எங்கள் வீட்டில் ஒரு பெரிய நாய் இருந்தது; அது என்னையும் பிரியங்கா காந்தியையும் பயமுறுத்தும். இரவில் தோட்டத்திற்குச் செல்லவேண்டும் என்றால் நடுங்கி போய்விடுவோம்,” என நினைவுகூர்ந்தார்.
சிறு வயது நிகழ்வுகளை பகிர்ந்த ராகுல் காந்தி:
இதனுடன், தனது பாட்டி இந்திரா காந்தி கற்றுக் கொடுத்த பாடத்தை அவர் விளக்கினார். ஒரு நாள் இரவில் பெற்றோர் வெளியே சென்றபோது, பாட்டி தன்னை தோட்டத்திற்குக் கொண்டு சென்று வெளியே பூட்டியதாக கூறினார். “மூன்று மணி நேரம் பயத்தில் நடுங்கினேன். பின்னர் பாட்டி வந்து, ‘நீ பாம்புகளையோ நாய்களையோ அல்ல, உன் மனதில் உருவாகும் கற்பனைகளுக்கே பயப்படுகிறாய். உண்மை பெரும்பாலும் இருளில் தான் இருக்கும்; அதனை எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கூறினார்,” என தெரிவித்தார். இது தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளது என்றும் கூறினார்.
சிறுபான்மையினருக்கு உரிய உரிமைகள் இல்லை:
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா குறித்து பேசுகையில், தற்போது அரசு கொண்டு வந்த மசோதா பெண்கள் அதிகாரமளிப்பதற்காக அல்ல என்று ராகுல் காந்தி விமர்சித்தார். அரசாங்கம் அரசியலமைப்பை விட ‘மனுவாதத்தை’ அதிகமாக நம்புகிறது என்றும் குற்றம் சாட்டினார். ஓபிசி, தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய உரிமைகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தனது சகோதரி பிரியங்கா காந்தியின் அரசியல் செயல்பாடுகளை பாராட்டிய அவர், “நான் 20 ஆண்டுகளில் சாதிக்காததை, என் சகோதரி ஐந்து ஆண்டுகளில் சாதித்துள்ளார்” என கூறினார். தாம் பேசும்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா சிரித்ததை கவனித்ததாகவும் குறிப்பிட்டார்.
தொகுதி மறுவரையறை மூலம் வரைப்படத்தை மாற்ற முயற்சி:
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி மாயாஜாலம் காட்டுவது போல மூன்று மசோதாக்களை ஒன்றின் மீது ஒன்றாக மறைத்து கொண்டு வந்துள்ளார் என்று குற்றம்சாட்டினார். மசோதா நிறைவேறாது என்பது தெரிந்தும், பீதியால் இதனை கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை மசோதா மூலம் இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது என்றும், இதனை மகளிர் மசோதா என திசைதிருப்பப்படுகிறதா என கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை.. மக்களவையில் சரமாரி கேள்விகளை முன்வைத்த திமுக எம்பி கனிமொழி!
ஓபிசி மற்றும் பழங்குடியினரை இந்துக்கள் என கூறுகிறீர்கள்; ஆனால் அவர்களுக்கு உரிய உரிமைகளை வழங்க மறுக்கிறீர்கள் என்றும் அவர் விமர்சித்தார். இந்திய சமூகத்தில் ஓபிசி மற்றும் தலித் மக்களிடம் எப்படி நடந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த மசோதா தேசவிரோதமானது:
ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மகளிர் மசோதா 2023ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது; இது உண்மையான மகளிர் அதிகாரமளிப்பு மசோதா அல்ல என்றும் தெரிவித்தார். காஷ்மீர், அசாம் போன்ற பகுதிகளில் போல தேசிய அரசியல் வரைபடத்தை மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.
தொகுதி மறுவரையறை மசோதா தேசவிரோதமானது; இத்தகைய மசோதாக்கள் மூலம் நாட்டின் ஜனநாயக அமைப்பு பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என கடுமையாகப் பேசினார்.