தலையணைக்கு அடியில் ஒரு டைம் பாம்: உங்கள் தூக்கத்தை திருடும் ஸ்மார்ட்போன்!
The Silent Sleep Thief: இன்றைய காலகட்டத்தில் அலார கடிகாரம் மற்றும் புத்தகங்களுக்கு மாற்றாக படுக்கையறைக்குள் நுழைந்த ஸ்மார்ட்போன்கள், தற்போது மனிதர்களின் தவிர்க்க முடியாத வாழ்வியல் பழக்கமாக மாறிவிட்டன. இரவு நேரத்தில் எல்லையற்ற சமூக ஊடகப் பக்கங்களை சுருள் செய்து பார்ப்பதால் உறங்கும் நேரம் பெருமளவில் வீணடிக்கப்பட்டு, தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்க்கை முறை ஸ்மார்ட்போன்களை சுற்றியே நகர்கிறது. குறிப்பாக, இரவில் தூங்குவதற்கு முன்பாக தொடும் கடைசி பொருளாகவும், காலையில் எழுந்தவுடன் பார்க்கும் முதல் பொருளாகவும் மொபைல் போன்களே மாறிவிட்டன. தலையணைக்கு அடியிலோ அல்லது படுக்கைக்கு அருகிலோ மொபைலை வைத்துக்கொண்டு உறங்குவது என்பது பலரது தவிர்க்க முடியாத பழக்கமாகிவிட்டது. ஆரம்பத்தில் அலாரத்திற்காக மட்டுமே படுக்கையறைக்குள் நுழைந்த இந்த சாதனம், தற்போது மனிதர்களின் வாழ்வியலோடு ஆழமாக ஒன்றிணைந்துவிட்டதாக உளவியலாளர்கள் மற்றும் தூக்கவியல் நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
படுக்கையறை பொருட்களை ஒற்றை சாதனமாக மாற்றிய தொழில்நுட்பம்
முன்பெல்லாம் மக்களின் படுக்கைக்கு அருகில் அலார கடிகாரங்கள், புத்தகங்கள், வானொலி பெட்டிகள் மற்றும் காலண்டர்கள் போன்ற பொருட்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், தற்போதைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி இந்த அத்தனை பொருட்களின் தேவைகளையும் ஒரே ஒரு ஸ்மார்ட்போனுக்குள் சுருக்கிவிட்டது. பொழுதுபோக்கு, இசை, வானிலை நிலவரம், முக்கிய நினைவூட்டல்கள் என அனைத்தும் ஒரே திரையில் கிடைப்பதால், படுக்கையறையில் மொபைல் போன் என்பது ஒரு விருப்பத் தேர்வாக இல்லாமல் இன்றியமையாத தேவையாக மாறிப்போயுள்ளது.
முடிவற்ற சுருள்களால் நள்ளிரவிலும் தொடரும் திரை நேரம்
இரவு நேரத்தில் படுக்கையில் சாய்ந்தபடி சமூக ஊடகங்களை ஆராய்வது, குறுந்தகவல்களுக்கு பதிலளிப்பது மற்றும் குறுகிய வீடியோக்களைப் பார்ப்பது போன்ற செயல்பாடுகள் பலருக்கும் தினசரி வாடிக்கையாகிவிட்டது. இணையதளங்களில் உள்ள உள்ளடக்கங்களுக்கு எல்லையே இல்லாததால், ஐந்து நிமிடங்கள் மட்டும் பார்ப்போம் என்று தொடங்கும் பழக்கம், விடிவிடி என்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து, மனிதர்களின் தூங்கும் நேரத்தை மறைமுகமாக அபகரித்து விடுகிறது.
மன அமைதியை சீர்குலைக்கும் நள்ளிரவு அறிவிப்புகள்
நள்ளிரவில் நாம் உறங்கிக் கொண்டிருக்கும் போது கூட, மொபைலில் வரும் சமூக ஊடக அறிவிப்புகள், அலுவலக மின்னஞ்சல்கள் மற்றும் குறுந்தகவல்களின் அதிர்வுகள் நமது தூக்கத்தின் தரத்தை பெருமளவில் பாதிக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் தகவல் வரலாம் என்ற எண்ணத்திலேயே மூளை விழிப்புடன் செயல்படுவதால், ஆழமான உறக்கம் தடைபடுகிறது. சில சமயங்களில் தங்களை அறியாமலேயே நள்ளிரவில் விழித்து மொபைலை சரிபார்க்கும் பழக்கத்திற்கு பலர் ஆளாகியுள்ளனர்.
Also Read: குழந்தைகளுக்கு ஏன் இந்த அதீத பயம்? பெற்றோர் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!
நீல நிற ஒளியால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள்
ஸ்மார்ட்போன் திரைகளில் இருந்து வெளியாகும் ‘ப்ளூ லைட்’ எனப்படும் நீல நிற ஒளி, மனித உடலின் தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்தும் ‘மெலடோனின்’ ஹார்மோன் உற்பத்தியை கடுமையாக பாதிக்கிறது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாகவே, தற்போதைய மொபைல்களில் கண் பாதுகாப்பு மற்றும் இரவு நேர மோட்கள் (Night mode) போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், தூங்குவதற்கு முன்பாக திரை பயன்பாட்டை முழுமையாக குறைப்பதே உடலுக்கு நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.