AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மழைக்கால உணவுப் பழக்கம்: ஆரோக்கியத்தைக் கெடுக்கும் இந்த தவறுகளைத் தவிருங்கள்!

Monsoon Season: மழைக்காலத்தில் செரிமானத் திறன் குறைவதால் சாலையோரத் திறந்தவெளி உணவுகள் மற்றும் ஈக்கள் மொய்த்த தண்பண்டங்களைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நச்சுத்தொற்றுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். ஈரப்பதமான சூழலில் கீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளில் கிருமிகள் வேகமாகப் பெருகுவதால், அவற்றை உப்பு நீரில் நன்றாகக் கழுவி, முழுமையாக வேகவைத்து மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

மழைக்கால உணவுப் பழக்கம்: ஆரோக்கியத்தைக் கெடுக்கும் இந்த தவறுகளைத் தவிருங்கள்!
தவிர்க்க வேண்டிய 4 முக்கிய உணவு
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 11 Jul 2026 16:35 PM IST

மழைக்காலம் வந்துவிட்டாலே சுடச்சுட எதையாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்கும் இயல்பாகவே தோன்றும். ஆனால், குளிர்ந்த காலநிலை மற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் இந்த காலகட்டத்தில் நம்முடைய செரிமான மண்டலம் சற்று மந்தமாகவே செயல்படும். இதனால், மழைக்காலத்தில் நாம் உட்கொள்ளும் உணவுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். தெரியாமல் செய்யும் சில சிறிய உணவுத் தவறுகள் கூட, பெரிய அளவிலான வயிற்று உபாதைகளுக்கும் தொற்று நோய்களுக்கும் வழிவகுத்துவிடும். எனவே, இந்த பருவத்தில் நாம் தவிர்க்க வேண்டிய முக்கிய தவறுகள் குறித்து இங்கு விரிவாகக் காண்போம்.

தெருவோரக் கடைகளில் விற்கப்படும் உணவுகளைத் தவிர்த்தல்

மழைக்காலத்தின் போது சாலையோரக் கடைகளில் விற்கப்படும் சாட் உணவுகள், வடை, பஜ்ஜி போன்றவற்றை வாங்கிச் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். திறந்தவெளியில் வைக்கப்படும் இந்த உணவுகளில் காற்றில் பரவும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். மேலும், ஈக்கள் மொய்ப்பதால் காலரா, டைபாய்டு போன்ற நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான அபாயம் இரட்டிப்பாகிறது. எனவே, எவ்வளவு ஆசையாக இருந்தாலும், இந்த சீசனில் வெளி உணவுகளைத் தவிர்த்து, வீட்டிலேயே சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட சூடான உணவுகளை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பானது.

பச்சை காய்கறிகள் மற்றும் கீரை வகைகளைச் சரியாகக் கையாளாத நிலை

ஆரோக்கியமானது என்று நினைத்து மழைக்காலத்தில் பச்சைக் காய்கறிக் கலவைகள் (Salads) மற்றும் கீரை வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது ஆபத்தாக முடியலாம். ஏனெனில், மழைக்கால ஈரப்பதத்தில் கீரைகளின் இடுக்குகளிலும், காய்கறிகளின் மேற்புறத்திலும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் மற்றும் கிருமிகள் வேகமாக வளரும். இவற்றைச் சரியாகக் கழுவாமல் பச்சையாகச் சாப்பிடும் போது குடல் தொற்று மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். எனவே, கீரை மற்றும் காய்கறிகளை சமைப்பதற்கு முன் வெதுவெதுப்பான உப்பு நீரில் நன்றாகக் கழுவி, பின்னர் நன்றாக வேகவைத்து மட்டுமே சாப்பிட வேண்டும்.

Also Read: உடல் எடை குறையவும், முகம் பளபளக்கவும்… இதோ 5 சூப்பர் ஜூஸ்…

குறைந்த அளவில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

கோடைகாலத்தை விட மழைக்காலத்தில் நமக்குத் தாகம் எடுப்பது மிகவும் குறைவாகவே இருக்கும். இதன் காரணமாகப் பலரும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்துவிடுகிறார்கள். இது உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை (Dehydration) ஏற்படுத்துவதுடன், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதையும் தடுத்துவிடும். செரிமானம் சீராக இருக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தி குறையாமல் இருக்கவும் தாகம் எடுக்காவிட்டாலும் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பது கட்டாயமாகும். இந்த காலகட்டத்தில் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து, மிதமான சூட்டில் குடிப்பது தொண்டை தொற்று வராமல் தடுக்க உதவும்.

Follow Us