AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உணவில் மஞ்சள் அதிகம் சேர்ப்பதால் கல்லீரல் பாதிக்குமா? உண்மை என்ன?

Too Much Turmeric Can Harm : மஞ்சள் சப்ளிமெண்ட் அதிகமாக எடுத்ததில் அமெரிக்க பெண் ஒருவருக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர் மாத்திரை வடிவில் மஞ்சள் எடுத்துக்கொண்டிருக்கிறார். இருப்பினும் சமையலில் அதிக அளவு மஞ்சள் பயன்படுத்துவதும் கல்லீரலுக்கு ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உணவில் மஞ்சள் அதிகம் சேர்ப்பதால் கல்லீரல் பாதிக்குமா? உண்மை என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Jul 2025 23:35 PM IST

சமீபத்தில், அமெரிக்காவிலிருந்து (America) ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியிருக்கிறது. அதில் 57 வயது பெண் ஒருவர் மஞ்சள் எடுத்துக் கொண்டதால் கல்லீரல் (Liver) பாதிப்புக்குள்ளானார். உடலில் வீக்கத்தைக் குறைக்க அந்தப் பெண் தினமும் மஞ்சள் தொடர்பான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில், சில வாரங்களிலேயே அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. முகம் வெளிறிப்போனது, சிறுநீரின் நிறம் மாறியிருக்கிறது. மேலும் அவருக்கு சோர்வு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவரை பரிசோதித்தபோது, அவரது கல்லீரல் நொதிகள் இயல்பை விட 60 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது, இது கல்லீரல் செயலிழப்புக்கு மிக நெருக்கமான ஒரு நிலை என்று கூறப்படுகிறது.

மருத்துவர்களின் கூற்றுப்படி, அந்தப் பெண் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக மஞ்சளை உட்கொண்டதால், அது அவரது கல்லீரலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண்ணின் உடல்நிலை மெல்ல மேம்பட்டு வருகிறது. ஆனால் இந்த சம்பவம் இயற்கையான பொருட்கள் கூட அதிக அளவில் தீங்கு விளைவிக்கும் என்பதற்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

மஞ்சளில் உள்ள மூலப்பொருளான குர்குமின், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, ஆக்ஸிஜனேற்றியாகச் செயல்படுகிறது. ஆனால் அதை அதிக அளவில் ஒரு துணை மருந்தாக எடுத்துக் கொள்ளும்போது, அதன் விளைவு பல மடங்கு அதிகரிக்கிறது. இதனால்தான் உடலால் இதை முழுமையாக செயலாக்க முடியாது, மேலும் இது கல்லீரலை நேரடியாகப் பாதிக்கிறது. குர்குமின் அளவுக்கு அதிகமாக உட்கொள்வது கல்லீரல் செல்களை சேதப்படுத்தும், மேலும் ஹெபடைடிஸ் போன்ற ஒரு நிலைக்கும் வழிவகுக்கும்.

இதையும் படிக்க : Fatty Liver: ஃபேட்டி லிவர் நோயாளிகள் தவிர்க்க வேண்டியதும் சேர்க்க வேண்டியதும்

என்பிசி  செய்திகளின்படி, இந்த விஷயத்தில், அந்தப் பெண் தினமும் சுமார் 2,250 மில்லிகிராம் மஞ்சள் சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொண்டார், இது பாதுகாப்பான அளவை விட இரண்டு மடங்கு அதிகம். இதனால் அவரது கல்லீரல் நொதிகள் கணிசமாக அதிகரித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது. சாதாரண உணவில் மஞ்சளின் அளவு குறைவாக இருப்பதால், அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது. ஆனால் செறிவூட்டப்பட்ட சப்ளிமெண்ட்ஸ் உறுப்புகளில் நேரடி விளைவை ஏற்படுத்தும், குறிப்பாக மருத்துவரை அணுகாமல் எடுத்துக் கொண்டால் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும்.

எவ்வளவு மஞ்சள் உட்கொள்வது சரியானது?

இந்திய சமையலறையில் மஞ்சள் ஒரு முக்கிய அங்கமாகும், பொதுவாக இது உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் சப்ளிமெண்ட்களைப் பொறுத்தவரை, அதன் அளவு குறித்து எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். ஹார்வர்ட் ஹெல்த் மற்றும் பல சுகாதார ஆராய்ச்சி நிறுவனங்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 500 முதல் 1,000 மி.கி வரை குர்குமின் பாதுகாப்பான அளவு என்று கருதப்படுகிறது. இதை விட அதிக அளவு எடுத்துக்கொள்வது உடலில், குறிப்பாக கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

இதையும் படிக்க: வாழைப்பழம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா? உண்மை என்ன?

உணவில் மஞ்சள் பயன்படுத்தப்படும்போது, அளவு மிகக் குறைவாக இருப்பதால், அது நன்மை பயக்கும். ஆனால் சந்தையில் கிடைக்கும் சப்ளிமெண்ட்களில் 90-95% வரை குர்குமின் இருக்கலாம். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

எனவே, மஞ்சளை ஒரு துணை மருந்தாக எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகி, லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவைப் பின்பற்றவும். சமூக ஊடகங்களைப் பார்த்து தேவையில்லாமல் எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

மருந்துகளை எடுத்துக்கொள்ளுமுன் செய்ய வேண்டியவை

  • எந்தவொரு சப்ளிமெண்ட்டையும் எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகவும்.
  •  மருந்து லேபிளில் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் அளவுகளை கவனமாகப் படியுங்கள்.
  • மஞ்சளை “பைப்பரின்” உடன் கலந்தால், அதன் உறிஞ்சுதல் திறன் அதிகமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
  • மஞ்சள் காமாலை, சோர்வு, பசியின்மை அல்லது அடர் நிற சிறுநீர் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
  • வீட்டில் தயாரிக்கப்பட்ட மஞ்சள் பாதுகாப்பானது, ஆனால் அதை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
  • சமூக ஊடகங்களின் பரிந்துரையின் கீழ் எந்த சப்ளிமெண்ட்டையும் எடுக்கத் தொடங்காதீர்கள்.

Follow Us