மு.க. ஸ்டாலினுக்கு நேரடி சவால் விடுத்த பியூஷ் கோயல்.. தமிழக அரசியலில் பரபரப்பு.. என்ன காரணம்!
Union Minister Piyush Goyal : தமிழகத்தின் துணை முதல்வராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க முடியாது என்று மு. க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சரும், பா ஜ க மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சவால் விட்டு தெரிவித்துள்ளார்.

உதயநிதியை எந்த காலத்திலும் முதல்வராக்க முடியாது
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அந்தந்த தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபீன் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போஜராஜன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடுகிறார். அந்த சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் சென்றிருந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 5 ஆண்டு காலம் திமுகவின் ஊழல் ஆட்சி
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் ஆட்சி நடைபெற்றுள்ளது. இந்த ஆட்சியில், டாஸ்மாக், நகராட்சி மற்றும் கனிம வளம் உள்ளிட்ட துறைகளில் ஊழல் செய்துள்ளனர். எந்த அரசு பணியானாலும் அதில் லஞ்சம் பெறாமல் கொடுப்பதில்லை. இப்படிப்பட்ட திராவிட முன்னேற்ற கழக அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். எனவே, தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி அமையும்.
மேலும் படிக்க: கடந்த 5 ஆண்டுகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் பலனை அனுபவிக்கிறார்கள் – பிரதமர் மோடி விமர்சனம்..
தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்
கடந்த 5 ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஊழல் செய்த காரணத்துக்காக தமிழகம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சுயநலவாதிகளான திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்து விட்டனர். இதன் மூலம் அரசியலில் பெண்களுக்கு கூடுதல் இடம் வழங்குவதை திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு பறித்துள்ளது.
சவால் விடுகிறேன்.. உதயநிதியை முதல்வராக்க முடியாது..
எனவே, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சிகளை தமிழக பெண்கள் வீழ்த்த வேண்டும். வரும் காலத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக அமர வைக்க வேண்டும் என்பதை மு. க. ஸ்டாலினின் ஒற்றை குறிக்கோளாக இருந்து வருகிறது. நான் சவால் விட்டு கூறுகிறேன். உதயநிதியை எந்த காலத்திலும் முதல்வராக்க முடியாது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: “ஷூட்டிங் போயிட்டு வந்து உடனே எம்.எல்.ஏ ஆகிடுவீங்களா?”.. சுந்தர் சி-யை வறுத்தெடுத்த பிரகாஷ் ராஜ்!