பனையூரில் தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. ஆட்சி அமைக்க விஜய் போடும் ‘மாஸ்டர் பிளான்’!
Tamilnadu Assembly Election Result: ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என்று த.வெ.க தரப்பில் ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆட்சி அமைக்கும் வரையிலான அடுத்த சில நாட்களுக்கு சென்னையிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தொடர்ந்து, திமுக கூட்டணி 73 இடங்களை பெற்று எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. அதேசமயம், இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 53 இடங்களை பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 2026 தேர்தல் களம்.. வீழ்ந்த திமுக கோட்டைகளும், அமைச்சர்களும்.. தவெகவின் வரலாற்று சாதனையும்..
ஆட்சி அமைக்க 10 இடங்கள் தேவை:
இதன் மூலம் அதிக இடங்களை பெற்ற தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. அதோடு, முதல் முறையாக திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தவெக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து இருக்கிறது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெக-விற்கு இன்னும் 10 இடங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. இருந்தாலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் ஆட்சியை அமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவார் என்று தெரிகிறது.
பனையூரில் முக்கிய ஆலோசனை:
வெற்றி பெற்ற 108 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை பனையூர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள முக்கிய அம்சங்கள் என்னவென்றால், ஆட்சி அமைப்பதற்கான வியூகம்: பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 10 இடங்களைப் பெற மற்ற கட்சிகளுடன் (காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் அல்லது பாமக) பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இரண்டு வார அவகாசம் கோரும் தவெக:
ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என்று த.வெ.க தரப்பில் ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆட்சி அமைக்கும் வரையிலான அடுத்த சில நாட்களுக்கு சென்னையிலேயே தங்க வைக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதனால் மாமல்லபுத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக வெற்றி வேட்பாளர்கள் தங்க வைப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் வீடு இருந்தால் அங்கு தங்கிக்கொள்ளலாம் என தவெக. தலைமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிக்க: “தமிழ்நாட்டில் ‘கூட்டணி ஆட்சி’யையே மக்கள் விரும்புகின்றனர்”.. புயலை கிளப்பிய திருமாவளவன்!!
அடுத்தகட்ட நடவடிக்கைகள்:
களமிறங்கிய முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள தவெக, தமிழகத்தின் அடுத்த ஆட்சியை அமைப்பதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்குப் பிறகு, விஜய் தனது அடுத்தகட்ட அதிரடி அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சென்னை பனையூர் பகுதியில் குவிந்துள்ளதால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குமா என்பதை இக்கூட்டத்தின் முடிவுகள் தீர்மானிக்கும்.