விஜய்க்கு வந்த புதிய சிக்கல்… பெரம்பூரில் வேட்புமனு நிராகரிக்க வாய்ப்பு? என்ன காரணம்!
Tvk Leader Vijay Nomination Perambur : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் புதிய குளறுபடி ஏற்பட்டதே காரணமாக தெரியவந்துள்ளது.

விஜயின் பெரம்பூர் வேட்பு மனு நிராகரிக்க வாய்ப்பு
தமிழகத்தில் ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச் 30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 6- ஆம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தான் போட்டியிடக்கூடிய சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். அத்துடன், தனது தேர்தல் பிரச்சாரத்தையும் அன்றைய தினமே தொடங்கினார். இதைத் தொடர்ந்து, நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 2- ஆம் தேதி ) தான் போட்டியிடக்கூடிய மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது வேட்பு தாக்கல் செய்திருந்தார். அத்துடன் ரூ.10 ஆயிரம் டெபாசிட் தொகையையும் செலுத்தி, உறுதி மொழியை ஏற்றுக்கொண்டார்.
பெரம்பூரில் தாக்கல் செய்த மனுவில் குற்ற வழக்கு இல்லை
மாற்று வேட்பாளராக சிரஞ்சீவி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து, மரக்கடை பகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுக்களில் புதிய குளறுபடி ஒன்று ஏற்பட்டுள்ளது. அதில், பெரம்பூர் தொகுதியில் விஜய் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் குற்ற வழக்குகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் 2 குற்ற வழக்குகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: பிரதமர் மோடி வருகை.. ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிக்கிறார்.. உச்சக்கட்ட பாதுகாப்பில் சென்னை, புதுச்சேரி!!
பெரம்பூரில் தாக்கல் செய்த மனு நிராகரிக்க வாய்ப்பு
அதில், மார்ச் 30- ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தின் போது பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கும், 2025 ஆகஸ்ட் மாதம் மதுரை மாநாடு தொடர்பான ஒரு வழக்கம் என 2 வழக்குகளை விஜய் குறிப்பிட்டு இருந்தார். இதுவே தற்போது சர்ச்சையாகி உள்ளது. ஏனென்றால், தேர்தலில் போட்டியிடும் ஒரே நபர் ஒரு இடத்தில் வழக்கு இல்லை என்றும், மற்றொரு இடத்தில் வழக்கு இருப்பதாகவும் தெரிவித்திருப்பது அவரது வேட்பு மனுவை நிராகரிக்கும் நிலை உள்ளது. எனவே, பெரம்பூர் தொகுதியில் விஜய் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
வேட்பு மனு பரிசீலனையில் தெரிய வரும்
வேட்பு மனு பரிசீலனைக்கு முன்பாக வழக்கு தொடர்பான விவரங்களை விஜய் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், பெரம்பூரில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படலாம். இதனால், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மட்டுமே வேட்பாளராக களமிறங்க முடியும். மேலும், ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறும் வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது, விஜயின் வேட்பு மனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது தெரிய வரும்.
மேலும் படிக்க: “தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார்”.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!!