“நாங்களும் விஜய் ரசிகர்கள்தான்”.. ஆனால் அவர்.. பரபரப்பை கிளப்பிய திமுக அமைச்சர்..
Tamilnadu Assembly Election: விஜய் தொடர்ந்து திமுகவை 'ஏமாற்ற அரசு', தீய சக்சி என்று விமர்சிப்பது குறித்துப் பேசிய அமைச்சர், விஜய் பாரதிய ஜனதா கட்சியால் அனுப்பப்பட்ட ஒரு வேட்பாளரைப் போலச் செயல்படுகிறார் என்று சாடினார். சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே அவர் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அனிதா ராதாகிருஷ்ணன்
Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு சரியாக இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அந்தவகையில், தேர்தல் தேதி நெருங்குவதால், ஒவ்வொரு கட்சியும் வாக்காளர்களைக் கவரப் புதிய உத்திகளைக் கையாண்டு வருகின்றன. அனைத்து தலைவர்களும், களத்தில் மக்களை நேரடியாக சந்தித்து தீவிர வாக்குசேகரித்து வருகின்றனர். அப்படி, தினந்தோறும் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க, எடப்பாடி பழனிசாமி பதிலுக்கு முதல்வர் ஸ்டாலினையும், துணை முதல்வர் உதயநிதியையும் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ‘ஜனநாயகன்’ படம் லீக்.. “உதயநிதியும், எல்.முருகனுமே காரணம்”.. ஆதவ் அர்ஜுனா பகீர் புகார்..
விஜய்யை விமர்சிக்காத முதல்வர்:
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் தனது பங்கிற்கு தேர்தல் பிரசாரங்களில் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். எனினும், முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் இதுவரை விஜய்யை குறிப்பிட்டு, பதில் விமர்சனம் வைத்தது இல்லை. அவர்கள் இருவரும் அதிமுக, பாஜகவை முன்வைத்து மட்டுமே விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், விஜய் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சில பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சவால் விடுத்த அமைச்சர்:
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “நாங்கள் அனைவரும் நடிகர் விஜய்யின் ரசிகர்கள்தான். அவர் ஊருக்கு வந்தால் ரசிகர்கள் அவரைப் பார்க்கச் செல்வது இயல்பு. ஆனால், தேர்தல் என்று வரும்போது மக்கள் அந்தந்தக் கட்சிகளுக்கே வாக்களிப்பார்கள்” என்று குறிப்பிட்டார். மேலும், தனது தொகுதியில் விஜய்யின் கட்சி டெபாசிட் இழக்கும் என்றும் அவர் சவால் விடுத்தார்.
விஜய் மீதான அரசியல் குற்றச்சாட்டு:
விஜய் தொடர்ந்து திமுகவை ‘ஏமாற்ற அரசு’, தீய சக்சி என்று விமர்சிப்பது குறித்துப் பேசிய அமைச்சர், விஜய் பாரதிய ஜனதா கட்சியால் அனுப்பப்பட்ட ஒரு வேட்பாளரைப் போலச் செயல்படுகிறார் என்று சாடினார். சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே அவர் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அனிதா ராதாகிருஷ்ணன், சிறுபான்மை மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பார்கள் என்றும், அவர்கள் என்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியையே ஆதரிப்பார்கள் என்றும் கூறினார்.
இதையும் படிக்க: விஜய் இல்லை என்றால் என்ன?.. அஜித்தை குறிவைக்கும் அதிமுக.. இபிஎஸ்-ன் புதிய ‘அட்டகாச பிளான்’ இதுதான்!
இபிஎஸ் மீதான விமர்சனம்:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், அவர் ஒரு காலத்தில் காலில் விழுந்து பதவியைப் பெற்றுவிட்டு, இன்று சசிகலாவை கைகழுவி விட்டுவிட்டதாகவும், அத்தகைய செயல்களை மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் விமர்சித்தார். தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வலுவாக இருப்பதாகவும், மக்களின் ஆதரவு தொடர்ந்து இந்தக் கூட்டணிக்கே இருக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.