தலைவருக்காக உங்கள் வீட்டு படியேறினேனே.. இறக்கமில்லாமல் மறுத்தவர் தானே நீங்கள்.. இபிஎஸ்-ஐ விளாசிய முதல்வர்!!
Tamilnadu Assembly Election: சாதனைகளைச் செய்துவிட்டு, எதிர்காலத்திற்கான தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்கிவிட்டு, நான் உங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றேன். ஆனால், டபுள் எஞ்சின், டப்பர் எஞ்சின் என்று வரும், அமித்ஷா ஆட்டுவிக்கும் பழனிசாமி அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் லட்சணம் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
Tamilnadu Polls 2026: எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி பேசியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திருநெல்வேலியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். அதன்படி, எடப்பாடி பழனிசாமி, நேற்று ஒரு பொதுக்கூட்டத்தில் என்ன பேசியிருக்கிறார் தெரியுமா? எனக்கு உயிர் கொடுத்து ஆளாக்கிய தலைவர் கலைஞர். கலைஞரை நான் வீட்டு சிறையில் வைத்திருந்தேன் என்று நாக்கூசாமல் பொய் பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தேர்தலில் பயத்தில் என்னை வம்பிழுத்துப் பேசித் தொடங்கியிருக்கின்றார்.
இதையும் படிக்க: “காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன்”.. பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை..
உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது:
முதலமைச்சராக என்னுடைய செயல்பாடுகளை விமர்சிக்க எதிர்க்கட்சி தலைவரான உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கின்றது. ஆனால், தலைவர் கலைஞருடன் ஒரு மகனாக என்னுடைய உறவைப் பற்றி, ஒரு சொல்பேசக்கூட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எந்த தகுதியும் கிடையாது. 5 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக இருந்து, இந்தத் தமிழ்நாட்டை நீண்டகாலம் ஆண்ட ஒரே முதலமைச்சர், தலைவர் கலைஞர். அவருடைய கடைசி ஆசை என்ன? அவருடைய தலைவராக அண்ணாவிற்கு அருகே அடக்கம் செய்ய வேண்டும். அதை அப்பாவுக்காக அல்ல, தலைவருக்காக. நானே உங்கள் வீட்டுப் படியேறி வந்து, கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டேனே. இரக்கம் இல்லாமல் மறுத்தவர்கள்தானே நீங்கள்? என்றும் ஆதங்கப்பட்டார்.
திமுக தேர்தல் வாக்குறுதியே சூப்பர் ஸ்டார்:
தொடர்ந்து பேசிய அவர், நம்முடைய திட்டங்களை முடக்குவோம்; தவிர்ப்போம் என்று சொல்லிக் கொண்டு பிரச்சாரத்திற்குச் சென்றால் மக்கள் விரட்டியடிப்பார்கள் என்று தெரிந்து கொண்டு, மகளிர் உரிமைத் திட்டத்திற்குக் குலவிளக்கு என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வந்திருக்கின்றார் பழனிசாமி. அவருக்கு, பதினோராவது தோல்வி முடிவுகளை ஒட்ட மக்களும் தயாராகிவிட்டார்கள். ‘சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டால், திமுக தேர்தல் அறிக்கைனு சின்ன குழந்தையும் சொல்லும்’. தேர்தல் அறிக்கையில் கூறியபடி இல்லத்தரசிகளுக்கு சிலிண்டர் வழங்கும் திட்டம், உரிமைத்தொகை ரூ. 2 ஆயிரம் உயர்வு என நாங்கள் சொன்னால், சொன்னதைச் செய்வோம்.
இதையும் படிக்க: வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்.. 12 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு..
மோடி மாடல் என்றால் என்ன?
சாதனைகளைச் செய்துவிட்டு, எதிர்காலத்திற்கான தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்கிவிட்டு, நான் உங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றேன். ஆனால், டபுள் எஞ்சின், டப்பர் எஞ்சின் என்று வரும், அமித்ஷா ஆட்டுவிக்கும் பழனிசாமி அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் லட்சணம் என்ன? மக்களுக்காக அவர்கள் செய்ததெல்லாம் என்ன? தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் பாஜக ஆட்சியில், தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி இல்லை. ஜி.எஸ்.டி இழப்பீடு இல்லை. நீட் தேர்வு விலக்கு இல்லை. தமிழ்மொழி வளர்ச்சிக்கு நிதி கிடையாது. ரயில்வே திட்டங்கள் கிடையவே கிடையாது. மெட்ரோ ரயில் திட்டம் இல்லை. தமிழ்நாட்டிற்கு ஒன்றுமே இல்லை என்பதுதான் மோடி மாடல். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.