“வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது”.. அதிமுக முகவர்களுக்கு இபிஎஸ் முக்கிய அறிவுறுத்தல்..
Tamilnadu Assembly Election: வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். தபால் வாக்குகளை எண்ணும் போது கூடுதல் கவனத்துடன் இருந்து, ஒவ்வொரு வாக்கையும் முறைப்படி கண்காணிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டையைத் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்களுக்கும், தேர்தல் பணியாற்றிய தொண்டர்களுக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். அத்துடன், மே 4ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க: தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?
வாக்காளர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி:
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 23.4.2026 அன்று தமிழ் நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று, தமிழக வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமான வாக்குப் பதிவை உறுதி செய்துள்ள… pic.twitter.com/NR2PskAhYw
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) April 25, 2026
தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குச் சாவடிகளுக்கு வந்து ஜனநாயகக் கடமையாற்றிய பொதுமக்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தல் களத்தில் அயராது உழைத்த அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
முகவர்களுக்குப் பத்துக் கட்டளைகள்:
வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மிகுந்த விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும் எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ள அவர், முகவர்களுக்காகச் சில முக்கிய நடைமுறைகளைப் பட்டியலிட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ஆம் தேதி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்ல வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து, வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை மையத்தை விட்டு வெளியே வரக்கூடாது.
கூடுதல் கவனம் வேண்டும்:
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். தபால் வாக்குகளை எண்ணும் போது கூடுதல் கவனத்துடன் இருந்து, ஒவ்வொரு வாக்கையும் முறைப்படி கண்காணிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டையைத் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
இதையும் படிக்க: எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..
வெற்றி வாய்ப்பு குறித்த நம்பிக்கை:
வாக்கு எண்ணிக்கை முடியும் வரை முகவர்கள் எவ்விதத் தொய்வுமின்றி விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் அறிவுறுத்தல்களைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதிமுக முகவர்கள் மற்றும் தொண்டர்கள் தேர்தல் களத்தில் காட்டிய அதே வேகத்தை வாக்கு எண்ணிக்கையின் போதும் காட்ட வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிக்கையின் முக்கிய நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.