“ஸ்டாலின் தான் வந்தாரு; நீச்சல் அடிக்க விட்டாரு”.. வேளச்சேரி பரப்புரையில் இபிஎஸ் விளாசல்!!
Tamilnadu Assembly Election: திமுகவினர் கடைகளில் பொருள் வாங்கிவிட்டுப் பணம் கேட்டால் மிரட்டுவதாகவும், உணவகங்களில் சாப்பிட்டுவிட்டுப் பணம் கேட்கும் ஊழியர்களைத் தாக்குவதாகவும் அவர் புகார் கூறினார். இத்தகைய அநாகரிகமான அரசியல் மற்றும் மிரட்டல் போக்குகளுக்கு இந்தத் தேர்தலோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

எடப்பாடி பழனிசாமி
Tamilnadu Polls 2026: சென்னை வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தனது உரையின் தொடக்கத்தில், பிரச்சாரத்தின் போது வெயில் சற்று குறைந்தது. உடனே இயற்கையே தங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகக் கூறித் தனது உரையைத் தொடங்கினார். திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் துன்பத்தையும் வேதனையையுமே அனுபவித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிக்க: பச்சை பொய் பழனிசாமி ஆட்சியில் தமிழகம் சீரழிந்திருந்தது… முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!
அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி:
குறிப்பாக மாநகரப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுப் போய்விட்டதாகத் தெரிவித்தார். சிறுமிகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டிய நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதிமுக ஆட்சியில் “சட்டத்தின் ஆட்சி” நடைபெற்றதாகவும், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
வேளச்சேரி வெள்ளப் பாதிப்பு:
#வேளச்சேரி, #சைதாப்பேட்டை தொகுதிகளில் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன்.
ஆட்சிக்கு வந்தால் “சென்னையில் என்றும் தண்ணீர் தேங்காது” என்றார்
திரு. @mkstalin.ஆனால், உண்மை என்ன?
“ஸ்டாலின் தான் வந்தாரு; நீச்சல் அடிக்க விட்டாரு” என்று… pic.twitter.com/7NuDIqJUB9— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) April 8, 2026
வேளச்சேரி மக்களின் நீண்ட காலப் பிரச்சனையான மழைக்கால வெள்ளப் பாதிப்பை குறிப்பிட்டு அவர் பேசுகையில், ஆட்சிக்கு வந்தால் வேளச்சேரியில் எங்குமே தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பதாகக் முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஒரு சாதாரண மழை பெய்தால் கூட இப்பகுதி தண்ணீரில் மூழ்கிவிடுகிறது. ஒரு பெண்மணி “ஸ்டாலின் எங்களை நீச்சல் அடிக்க விட்டுவிட்டார்” என்று வேதனையுடன் கூறியதை மேற்கோள் காட்டி, திமுக அரசின் தோல்வியை அவர் விமர்சித்தார்.
வியாபாரிகளின் நிலை:
வேளச்சேரியில் வசிக்கும் சிறு வியாபாரிகள் மற்றும் உழைக்கும் மக்களின் நிலை குறித்து விளக்குகையில், திமுகவினர் கடைகளில் பொருள் வாங்கிவிட்டுப் பணம் கேட்டால் மிரட்டுவதாகவும், உணவகங்களில் சாப்பிட்டுவிட்டுப் பணம் கேட்கும் ஊழியர்களைத் தாக்குவதாகவும் அவர் புகார் கூறினார். இத்தகைய அநாகரிகமான அரசியல் மற்றும் மிரட்டல் போக்குகளுக்கு இந்தத் தேர்தலோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிக்க: ஸ்டார் தொகுதியான பெரம்பூர் சட்டமன்ற தொகுதி… விஜய், திலகபாமா வேட்பு மனு ஏற்பு..
திமுகவை அகற்ற அழைப்பு:
தமிழகத்திலிருந்து திமுக எனும் “தீய சக்தியை” அகற்ற மக்கள் முன்வர வேண்டும் என்றும், 2026-ஆம் ஆண்டு வரை இந்த மாநகர மக்களுக்கு திமுக அரசு எந்தவொரு நன்மையும் செய்யவில்லை என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வேளச்சேரியின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்கவும் அ.தி.மு.க-விற்கு ஆதரவு அளிக்குமாறு எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.