2.5 கோடி பேரை கழக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.. முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..
Tamil Nadu CM MK Stalin: திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “ நமக்கு இன்னமும் 30 நாள் இருக்கு. எண்ணிக்கைக்கு நாம் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது நம் கழகத்தினர் கலந்துரையாடுவதை நாம் உறுதி செய்திட வேண்டும்” என பேசியுள்ளார்.

கோப்பு புகைப்படம்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், ஜூலை 17, 2025: திமுக உறுப்பினர் சேர்க்கை முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது. வாக்குச்சாவடியில் உறுப்பினர் சேர்க்கை பணியை சரியாக பின்பற்றவில்லை என்றால் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும், சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை மற்றும் பரப்புரை இயக்கம் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிர்வாகிகளுக்கு பல்வேறு விஷயங்கள் குறித்து அறிவுரை வழங்கினார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ” தமிழ்நாட்டோட மண் – மொழி – மானம் காக்கவும், நம்மோட திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர வீடு வீடாக போய் பரப்புரை மேற்கொள்ளவும், கழகத்தில் அவர்களை உறுப்பினர்களா சேர்க்கவும், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை கடந்த 3-ஆம் தேதி தொடங்கினோம்.
மேலும் படிக்க: பெருந்தலைவர் காமராஜர் குறித்த சர்ச்சை கருத்து.. திருச்சி சிவா சொன்ன விளக்கம்..
தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர மக்களைத் தேடி வீடு வீடாகச் செல்கிறோம் என்பது மகிழ்ச்சி. செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் வரவேற்பு நன்றாக உள்ளது என கேள்விப்படும் போது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் உழைக்கும் ஒவ்வொரு கழக உடன்பிறப்புக்கும் என் தலை தாழ்ந்த வணக்கம்; நன்றி!
2.5 கோடி பேரை கழக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்:
நமக்கு இன்னமும் 30 நாள் இருக்கு. எண்ணிக்கைக்கு நாம் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது நம் கழகத்தினர் கலந்துரையாடுவதை நாம் உறுதி செய்திட வேண்டும்.
ஒன்றிய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள – இழைக்கவுள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்து சொல்வதுதான் இந்த முன்னெடுப்பின் நோக்கம். அடுத்த 30 நாட்களில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து 2.5 கோடி பேரை கழக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
மேலும் படிக்க: தவெக கொடி விவகாரம்.. விஜய் பதிலளிக்க உத்தரவு
நாம உருவாக்கியிருக்க பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்கள் கழகத்துக்கு மிகப்பெரிய சொத்து. அவங்களை எதிர்வரும் சட்டன்றத் தேர்தலுக்கும் – தேர்தலை கடந்தும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது.
போலி உறுப்பினர் சேர்ப்பு – கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை:
எந்தெந்த வாக்குச்சாவடிகளில் நாம் வழங்கிய நடைமுறையை சரியாக கடைபிடிக்கவில்லையெனில் அங்கெல்லாம் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவோம் என்று பேசியுள்ளார். மேலும் உறுப்பினர் சேர்க்கையில் போலி வாக்காளர் சேர்ப்பு போன்றவை கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.