சரிந்தது திமுக கோட்டை: வெறிச்சோடிய அறிவாலயம்..பின்வாசல் வழியாக வெளியேறிய திமுக புள்ளிகள்!
Setback for DMK: தேர்தல் முடிவுகளில் திமுக தொடர் பின்னடைவைச் சந்தித்து வருவதால், வெற்றிக் கொண்டாட்டத்திற்காக அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மற்றும் அலங்காரப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு அகற்றப்பட்டன. முடிவுகள் சாதகமற்ற நிலையை எட்டியதால் அங்கிருந்த கட்சித் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்ற நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த பலத்த போலீஸ் பாதுகாப்பும் விலக்கிக்கொள்ளப்பட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக ஆரம்பம் முதலே பல தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இதனால், அதிகாலையில் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக அண்ணா அறிவாலயத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். மதிய வேளையில் பின்னடைவு உறுதியானதைத் தொடர்ந்து, உற்சாகமிழந்து காணப்பட்ட உடன்பிறப்புகள் மெல்ல மெல்ல அறிவாலயத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
பாதுகாப்புப் பணியில் இருந்து விலகும் காவல்துறை
கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர்களின் வருகைக்காக 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காணப்பட்ட அண்ணா அறிவாலயம், தற்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது. திமுகவின் தேர்தல் முடிவுகள் சாதகமாக இல்லாத சூழலில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கூட்டம் கூட்டமாகத் தங்கள் முகாம்களுக்குத் திரும்பத் தொடங்கிவிட்டனர். அறிவாலயத்தின் பிரதான நுழைவாயில்களில் இருந்த பாதுகாப்பு வளையங்கள் தளர்த்தப்பட்டுள்ளன.
பாதியிலேயே நிறுத்தப்பட்ட அலங்காரப் பணிகள்
வெற்றி பெற்றால் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காகப் பிரம்மாண்டமான சாரப்பணிகள் மற்றும் மேடை அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்தன. ஆனால், தேர்தல் முடிவுகள் தங்களுக்கு எதிராக வருவதை உணர்ந்த நிர்வாகிகள், அந்தப் பணிகளைப் பாதியிலேயே நிறுத்த உத்தரவிட்டனர். இதனால் பாதியில் நின்ற அலங்காரப் பொருட்களும், காலியான கூடாரங்களும் அறிவாலயத்தின் தற்போதைய நிலையைப் பிரதிபலிக்கின்றன.
Also Read: Tamil Nadu Election 2026 Results LIVE: தமிழ்நாட்டை ஆளப்போவது யார்? முன்னிலையில் தவெக!
தலைமறைவான முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள்
வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை ஆய்வு செய்ய அறிவாலயம் வந்திருந்த திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட வழக்கறிஞரணி நிர்வாகிகள், பின்னடைவு செய்தி வந்தவுடன் பின்வாசல் வழியாக வெளியேறினர். செய்தியாளர்களைச் சந்திக்கத் தவிர்த்துவிட்டு அவர்கள் அவசர அவசரமாகப் புறப்பட்டுச் சென்றது அங்கிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.