தமிழக சட்டமன்ற தேர்தல் 2026.. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்குகிறது!
Scrutiny of Nomination Starts Today | தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பெறப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்க உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஏப்ரல் 07 : 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான (2026 Tamil Nadu Assembly Election) வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (ஏப்ரல் 06, 2026) முடிவடைந்தது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 07, 2026) முதல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்க உள்ளது. வேட்பாளர்களின் இறுதி பட்டியலை தயார் செய்வதற்கான முதல் படியாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வேட்புமனு பரிசீலனையில் என்ன நடைபெறும், இதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு
தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30, 2026 அன்று தொடங்கியது. மொத்தம் 8 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், நேற்றுடன் (ஏப்ரல் 06, 2026) வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. வேட்புமனு தாக்கலின் முதல் நாளே முதலமைச்சர் வேட்பாளர்களான திமுக தலைவர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக தலைவர் சீமான் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க : எடப்பாடி கே.பழனிசாமியின் சொத்து மதிப்பு எவ்வளவுன்னு தெரிஞ்சுக்கனுமா? முழு விவரம் இதோ!
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதாலும், முகூர்த்தம் என்பதாலும் நேற்றைய தினம் அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்ட ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பெறப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்க உள்ளது. இதன் மூலம் தள்ளுபடியான வேட்புமனுக்களின் விவரம் இன்று மாலை 3 மணிக்குள் தெரிய வரும்.
ஏப்ரல் 9 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறலாம்
இவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் தங்களது வேட்புமனுக்களை ஏப்ரல் 09, 2026 அன்று திரும்ப பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது. இதன் பிறகு அன்றைய தினம் மதியத்திற்குள் வேட்பாளர் இறுதி பட்டியலும் தயார் செய்யப்படும். வாக்காளர் துணை பட்டியல் நேற்று இறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியல் இன்று அச்சிடப்பட்ட உள்ளதாக தேர்தல் அதிகாரி மூலம் தகவல் வெளியானது. இந்த நிலையில், துணை பட்டியல் உடன் இணைந்த வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.