முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.. மீண்டும் திராவிட மாடல் அரசு தான் அமையும் – துரை வைகோ..
தமிழ்நாட்டுக்கு தேவையான மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரவில்லை. உங்களுடைய வேட்பாளர் தி.மு. ராசேந்திரன் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து, மக்களுக்காக 60 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் வைகோவுக்கு உதவியாளராக மாறினார். அவர் படித்தவர், பண்பாளர். நீங்கள் எளிதாக அணுகக்கூடிய வேட்பாளராக இருப்பார் என துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 13,2026: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் தி.மு. ராசேந்திரனை ஆதரித்து, மதிமுக முதன்மை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ கடையநல்லூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். மேலக் கடையநல்லூர் பகுதியில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து துரை வைகோ பேசியதாவது: திமுக கூட்டணிக்கு நீங்கள் 3 காரணங்களுக்காக வாக்கு செலுத்த வேண்டும். முதல் காரணம், திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டுக்கு ஏராளமான நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, தாய்மார்களுக்கு 2021 சட்டமன்றத் தேர்தலின்போது மகளிர் உரிமைத் தொகை அளிப்பதாக வாக்குறுதி அளித்து, அதனை நிறைவேற்றியது.
திமுகவின் வாக்குறுதிகள்:
இப்போது ரூ.1000க்கு பதிலாக ரூ.2000 வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். அடுத்த மனம் கவர்ந்த திட்டம் ரூ.8,000 கூப்பன். அதை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான மிக்சி, கிரைண்டர் போன்ற மின்சாரப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மூன்றாவதாக, விடியல் பயணத் திட்டத்தின் மூலம் நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி சென்று வருகின்றனர். அந்தத் திட்டம் தொடரும்.
இதேபோன்று ‘தமிழ் புதல்வன்’ திட்டம், ‘புதுமைப் பெண்’ திட்டம் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தி, மக்களின் நன்மதிப்பை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. முதியோர் உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தொகையையும் ஸ்டாலின் உயர்த்தி அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க: அய்யா ராமதாஸ் பூரண குணமடைந்து, மீண்டும் பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டுகிறேன் – திமுக தலைவர் ஸ்டாலின்..
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அதிக முதலீடுகள் ஈர்ப்பு:
இதுபோன்ற சிறப்பான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. ஒருபுறம் சமூக நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும், மறுபுறம் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். அவரது முயற்சியால் 12 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இன்றைக்கு இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முன்னிலை பெற்றுள்ளது. சுமார் 11.19 விழுக்காடு தொழில் வளர்ச்சி பெற்றுள்ளதாக நிதி ஆயோக் தகவல் தெரிவிக்கிறது.
ஆனால், தமிழ்நாட்டுக்கு தேவையான மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரவில்லை. உங்களுடைய வேட்பாளர் தி.மு. ராசேந்திரன் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து, மக்களுக்காக 60 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் வைகோவுக்கு உதவியாளராக மாறினார். அவர் படித்தவர், பண்பாளர். நீங்கள் எளிதாக அணுகக்கூடிய வேட்பாளராக இருப்பார். எதிரணி வேட்பாளர் நல்ல மனிதர்தான்.
மேலும் படிக்க: அமைச்சர் சேகர் பாபு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை – பரபரப்பு தகவல்
அடுத்து அமையப்போவது திராவிட மாடல் அரசு தான்:
ஆனால், நீங்கள் ஆளுங்கட்சி உறுப்பினர் இந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக வருவது சிறப்பா, அல்லது எதிர்க்கட்சி உறுப்பினர் எம்எல்ஏவாக வருவது சிறப்பா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் எந்த முக்கியமான திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது? பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதா? இந்த ஊருக்கு தேவையான திட்டங்களும் அதற்கான நிதியும் கிடைத்துள்ளதா?
அடுத்து வரப்போவது திராவிட மாடல் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு. அப்போது நம்முடைய வேட்பாளர் தி.மு. ராசேந்திரன் வெற்றி பெற்றால், இந்தப் பகுதிக்கான திட்டங்கள் மற்றும் மக்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார் என்று பேசினார்.