மார்ச் 23, 2026: தமிழக சட்டமன்றத் தேர்தலில் உள்ள 234 தொகுதிகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆகும். கொளத்தூர் தொகுதி என்பது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தொகுதியாக பார்க்கப்படுகிறது. இந்த தொகுதி திமுகவின் கோட்டை என்றும் சொல்லலாம். இது ஒரு பொது தொகுதி ஆகும். அதேபோல், சென்னை வடக்கு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி:
இந்த தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை சுமார் 2.8 லட்சமாக உள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், திமுக வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிட்டத்தட்ட 1,52,522 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் 35,138 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் மகள் நீதி மையமும், நான்காவது இடத்தில் நாம் தமிழர் கட்சியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அதிமுக vs திமுக.. மதுரை தெற்கு தொகுதி யாருக்கு சாதகம்?
இந்த தொகுதி திமுகவின் வலுவான ஆதிக்கம் கொண்டதாக பார்க்கப்படுகிறது. பெரம்பூர், வில்லிவாக்கம், மாதவரம், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகள் இந்த தொகுதியில் அடங்கும். இது நடுத்தர வர்க்க மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் கருதப்படுகிறது.
மக்கள் முன்வைக்கும் முக்கிய பிரச்சனைகள் என்ன?
முதல்வரின் தொகுதியாக இருந்தாலும், சில அடிப்படை பிரச்சினைகள் தொடர்ந்து மக்கள் தரப்பில் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, சாலை வசதிகள் போதிய அளவில் இல்லாதது, மழைக்காலங்களில் வெள்ளப் பிரச்சினைகள் அதிகரிப்பது, கழிவுநீர் வடிகால் வசதிகள் குறைவு போன்றவை முக்கியமாக கூறப்படுகின்றன. இவற்றுக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், கொளத்தூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளும் நடைபெற்று வருகின்றன. குளங்கள் மறுசீரமைப்பு, புதிய சாலைகள் அமைத்தல், பூங்காக்கள், நூலகங்கள், மினி ஸ்டேடியம், வீட்டு வசதி திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை நகரின் முக்கிய நகர்ப்புற தொகுதிகளில் ஒன்றாகவும் இது விளங்குகிறது.
இம்முறை வெற்றி வாய்ப்பு யாருக்கு?
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்த தொகுதியில் திமுக வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கருதப்படுகிறது. ஆனால், மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், 2026 தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அவர் போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தரப்பில் சௌந்தரபாண்டியன் வேட்பாளராக களமிறக்கப்படுகிறார்.