வாக்கு எண்ணும் பணி.. இந்த துறை ஊழியர்களுக்கு விலக்கு.. தேர்தல் ஆணையம் அதிரடி!
Rural Development Department : தமிழகத்தில் மே 4- ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குகள் எண்ணும் பணிகளில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளார் .

கோப்புப்படம்
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தமிழகம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், மேற்குவங்க மாநிலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 2- ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மே 4- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், வாக்கு எண்ணும் பணிகளில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று தலைமை தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
பாதியில் நிறுத்தப்பட்ட ஊரக வளர்ச்சி பணிகள்
தற்போது தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் உள்ள ஊரக பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் அடிப்படை தேவைக்கான குடிநீர் மற்றும் தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தொடங்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் ஆகியவற்றை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவே, இந்த பணிகளை விரைந்து முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே வாக்கு எண்ணும் பணிகளில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களை ஈடுபடுத்தக் கூடாது. மேலும், ஊரக வளர்ச்சி திட்ட பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் தலைமை தேர்தல் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரை உடைத்தது த.வெ.கவினரா? போலீஸ் சொன்ன விளக்கம்..
தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள்
பொதுவாகவே, ஒரு மாநிலத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால், அந்த தேர்தல் பணிகளில் அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு தேர்தல் ஊழியர்களாக நியமனம் செய்யப்படுவார்கள். அவர்கள் தங்களது பொதுவான பணிகளை விட தேர்தல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அதன் அடிப்படையில், ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்துவதற்கான வாக்குச்சாவடி தேர்வு செய்தல், வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல்.
தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
வாக்குச்சாவடி பகுதிகளில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளுதல் என்பன உள்ளிட்ட பணிகளை தேர்தல் ஊழியர்கள் செய்து வருவர். இதேபோல, வாக்குகள் எண்ணும் பணியிலும் இதே ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால், தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி பணிகள் தேர்தல் பணிகள் காரணமாக கிடப்பில் கிடக்கின்றன. எனவே, இந்த பணிகளை தொய்வின்றி துரிதமாக முடிக்க வேண்டும் என்பதற்காகவே ஊரக வளர்ச்சி துறை ஊழியர்களை வாக்கு எண்ணும் பணிகள் ஈடுபடுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும்.. மழையும் இருக்கு.. வானிலை அப்டேட் இதோ..