நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர்..பரபரக்கும் அரசியல் களம்!
Election Commission: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் வருகிற பிப்ரவரி 12- ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அவர்கள் சென்னையில் தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர் .

தமிழகம் வரும் தலைமை தேர்தல் துணை ஆணையர்
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. பொதுவாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலத்திற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் ஆகியோர் சென்று ஆய்வு செய்வது வழக்கமாகும். அதன்படி, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழகத்துக்கு இந்திய தேர்தல் ஆணைய குழுவினர் வருகிற பிப்ரவரி 12- ஆம் தேதி ( வியாழக்கிழமை) வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் சென்னையில் 2 நாட்கள் தங்க உள்ளனர். அப்போது, தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் உயர் அதிகாரிகளிடம் சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
விரிவான ஆய்வை மேற்கொள்ளும் தலைமை தேர்தல் அதிகாரி
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தகவலை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் அதிகாரிகள் சமர்ப்பிப்பார்கள். இதைத் தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் தேர்தல் ஆணைய குழுவினர் தமிழகத்துக்கு வருகை தந்து விரிவான ஆய்வை மேற்கொள்வார்கள். இந்த வருகையின் போது, தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள்.
மேலும் படிக்க: தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது…முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை!
துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய அரசு துறை அதிகாரிகள், வருமான வரித் துறை அதிகாரிகள், வங்கித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும். இதனிடையே, தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணி முடிக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு
இதைத் தொடர்ந்து, வருகிற பிப்ரவரி 17- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறாக தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, தமிழக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், இந்திய தலைமை தேர்தல் அதிகாரியின் தமிழகம் வருகை, தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல், வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு, சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு உள்ளிட்ட அரசியல் சார்ந்த அறிவிப்புகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளன. இதனால், தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: ராமதாஸ், பிரேமலதா முடிவுக்கு காத்திருக்கும் திமுக, அதிமுக.. நீடிக்கும் இழுபறி!!