பழனிச்சாமிக்கெல்லாம் பதில் சொல்லும் நிலைக்கு வந்துவிட்டேன்… முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம்!
CM MK Stalin Slams Eps: பெரிய பெரிய தலைவர்களுடன் பழகும் அனுபவம் கிடைத்த எனக்கு எடப்பாடி கே. பழனிசாமிக்கெல்லாம் பதில் அளிக்கும் நிலை வந்துவிட்டதே என்று எண்ணி வருத்தம் அடைவதாக திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க.ஸ்டாலின் தெரிவித்தார்.

எடப்பாடிக்கு பதில் அளிக்கும் நிலமை
சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பரப்புரை மேற்கொண்டிருந்த போது, கொரோனா காலகட்டத்தில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு கொரோனா பெருந்தொற்றை கையாண்டிருந்தது. திமுக ஆட்சியில் இது போன்ற இடர்பாடுகள் ஏற்படவில்லை. அவ்வாறு ஏற்பட்டிருந்தால் முதல்வர் மு. க. ஸ்டாலின் காணாமல் போயிருப்பார். அவரும் கொரோனாவோடு போயிருப்பார் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற திமுக பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு. க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து பேசியுள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தேர்தல் தோல்வி பயத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தினந்தோறும் தரங்கெட்டு பேசி வருகிறார்.
மரணத்தை கண்டு அஞ்சக்கூடியவன் நான் அல்ல
திமுக ஆட்சியில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால், முதல்வரும் கொரோனாவோடு போய் இருப்பார் என்று பழனிசாமி பேசியுள்ளார். என் மரணத்தை பற்றி பேசும் பழனிச்சாமி அவர்களே மரணத்தை பார்த்து கலங்கக்கூடியவனோ, பயப்பட கூடியவனோ நான் கிடையாது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் கடந்த 1971- ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு வருவதற்கு முன்னதாகவே மிசா சட்டத்தின் கீழ் 23 வயதில் கைது செய்யப்பட்டு சிறை கொடுமைக்கு ஆளானவன் நான். பொது வாழ்வில் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பக்குவத்தோடு சிறைக்கு அனுப்பி வைத்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதி.
மேலும் படிக்க: புதுச்சேரி தேர்தல்.. வாக்களித்துவிட்டு பைக்கில் பறந்த முதல்வர் ரங்கசாமி.. வைரல் வீடியோ!!
கொடுஞ்சிறைக்கு பயப்படாத நான் கொரோனாவுக்கா பயப்படுவேன்
கொடுஞ்சிறைக்கே பயப்படாத நான், இந்த கொரோனாவுக்காக பயப்பட போகிறேன். கொரானாவை பார்த்து அனைவரும் அச்சமடைந்தபோது, பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு கொரோனா வார்டுக்குள் சென்றவன் நான். கொரோனா வார்டுக்கு செல்வதை யாருக்கும் முன்னதாக தெரிவிக்கவில்லை. இதனால், எனது மனைவி துர்கா என் மீது கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசாமல் இருந்தார். மக்களை காப்பதற்கு துணிச்சலாக செல்லக்கூடியவன். இதற்கெல்லாம் பயந்து கொண்டு அரசியல் தலைவராக இருக்க முடியாது.
பழனிசாமிக்கு பதில் அளிக்கும் நிலைமை
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் எம்ஜிஆர் ஆகிய எத்தனையோ பெரிய தலைவர்களுடன் நேரடியாக பழகிய அனுபவம் கொண்ட நாம் பழனிசாமிக்கெல்லாம பதில் சொல்லக்கூடிய நிலைமை இருக்கிறதே என்று வருத்தம் அடைகிறேன் என்று தெரிவித்தார்.
எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம்
இந்த நிலையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்த பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அதில். கொரோனா மட்டும் வந்திருந்தால் முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் காணாமல் போயிருப்பார் என்று தான் கூறினேன். ஆனால், அதை சிலர் எடிட் செய்து “காணாமல்” என்ற வார்த்தையை எடுத்து விட்டு அந்த வீடியோவை பரப்பி வருகிறார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழகத்தை புறக்கணிக்கும் ராகுல் காந்தி?.. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்?..