தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க எவ்வளவு செலவாகும் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!
Tamil Nadu Assembly Elections : தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிப்பதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்பேரில், மத்திய அரசு ரூ.1,302 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார் .

தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்த நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது முதல் மே 4- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரை தமிழக தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு கட்ட வேலைகள் உள்ளன. இதில், வேட்பாளர்களின் செலவு விவரங்களை கண்காணிப்பதற்கான குழுக்கள், நிலை கண்காணிப்பு குழுக்கள், தேர்தல் பறக்கும் படைகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வந்துள்ள மத்திய பாதுகாப்பு படைகள் உள்ளிட்டோர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு ஊதியம் வழங்கப்படும். மேலும், வாக்குப்பதிவு நாளில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கான அடிப்படை வசதிகள் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு
இதே போல, வாக்குப்பதிவு நாளிலும் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்குப்பதிவு மையங்கள் அமைப்பு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வந்து கொண்டு செல்லுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்பேரில், மத்திய அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதன்படி, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு மத்திய அரசு ரூ.1,302 கோடியை ஒதுக்கி உள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் நாதக தலைவர் சீமான் தேர்தல் பரப்புரை!
கடந்த தேர்தல்கள்களுக்கு முறையே ரூ.975 கோடி- ரூ.1,009 கோடி
இதில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிப்பதற்கு ரூ.975 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதே போல, கடந்த 2024 மக்களவை தேர்தலை நடத்தி முடிக்க ரூ.1,009 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்டுள்ளன. இதே போல, தமிழகம் முழுவதும் 3,302 இடங்கள் பதற்றம் நிறைந்த இடங்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ரூ.462 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தற்போது வரை ரூ.462 கோடி மதிப்பிலான பணம், நகை உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வருகிற ஏப்ரல் 13- ஆம் தேதிக்குள் துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை தர உள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் சுமார் 2.5 லட்சம் பேர் தபால் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்.
மேலும் படிக்க: எழும்பூர் தேர்தல் களம் 2026.. இளம் ரத்தம் பாயும் நான்கு முனைப் போட்டி.. ஒரு சிறப்புப் பார்வை!!