அமமுகவின் அதிரடி வேட்பாளர் பட்டியல்.. தேர்தல் அறிக்கை.. டிடிவி தினகரன் வெளியிட்டார்.. யார் யார் இடம் பெற்றுள்ளனர்!
Ammk Candidate List: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் கட்சியின் தேர்தல் அறிக்கை ஆகியவற்றை கட்சியின் பொதுச்செயலாளர் டி. டி. வி தினகரன் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டார். அதில்,
மேலும் படிக்க: கோவில்பட்டி தொகுதியை கைப்பற்ற இலக்கு… திமுகவில் எழும் கழக குரல்… யார் வசம் செல்கிறது!
- நாங்குநேரி தொகுதியில் இசக்கிமுத்து.
- ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தரராஜன்.
- சைதாப்பேட்டை தொகுதியில் செந்தமிழன்.
- திருப்பத்தூர் தொகுதியில் ஞானசேகரன்.
- மன்னார்குடி தொகுதியில் எஸ். காமராஜ்.
- மடத்துக்குளம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சண்முக வேலு.
- பூவிருந்தவல்லி தொகுதியில் ஏழுமலை.
- திருவையாறு தொகுதியில் வேலு கார்த்திகேயன்.
- பெரியகுளம் தொகுதியில் கதிர்காமு.
- திருச்சி மேற்கு தொகுதியில் தொட்டியம் ராஜசேகரன்.
- காரைக்குடி – தேர்போகி பாண்டி. ஆகிய 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அமமுக தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு
இதைத் தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளை டி.டி.வி. தினகரன் வெளியிட்டார். இதில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 85 சதவீதம் தமிழர்கள் மட்டுமே பணிபுரியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும். தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் பெற்ற அனைத்து விதமான வங்கி கடன்களும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
100 நாள் வேலை மற்றும் ஊதியம் உயர்வு
முல்லை பெரியார் அணையில் 152 அடிக்கு நீரை தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடகா அரசின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டு தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும். காவிரி டெல்டா பகுதியில் இயற்கை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்த்திடவும், ஊதியத்தை உயர்த்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் நடைபெறும் மணல் உள்ளிட்ட கனிமவள கொள்ளைகளை தடுத்து நிறுத்தி அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வடதமிழகத்தில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை
சட்டபூர்வமான சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்திட வலியுறுத்துவதோடு 69 சதவீத இட ஒதுக்கீடு முறையாக பாதுகாக்கப்படும். தென் மாவட்டங்களில் வசிக்கும் சீர்மரபினர்களுக்கு டிஎன்சி அல்லது டி.என்.டி என 2 வகையான சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறையை மாற்றி டி.என்.டி. என்ற ஒற்றை சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா மற்றும் டிஎம்சி திட்ட பள்ளிகள் அதிக அளவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கலை, அறிவியல், இளநிலை படிப்புகளுக்கு அனைத்து வகையான கட்டணங்களும் ரத்து செய்யப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் போல வட தமிழக மக்களுக்காக புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை வெளியிட்டார்.
மேலும் படிக்க: அரசியலில் தடம் பதிக்கும் இயக்குநர் சுந்தர்.சி.. சட்டமன்றத் தேர்தலில் போட்டி.. எந்த கட்சியில் தெரியுமா?

