இனி ஏசியை இலவசமாக பயன்படுத்தலாம் – மத்திய அரசின் மானியம் – எப்படி பெறுவது?
Zero Electricity Bills : கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் மக்கள் மின் கட்டணம் இல்லாமல் ஏசி பயன்படுத்தும் வகையில் மத்திய அரசின் சோலார் மின் திட்டம் உதவும். இதற்கு அரசின் மானியமும் கிடைக்கும்.

மாதிரி புகைப்படம்
கோடைக்காலத்தில் வழக்கமாக உயரும் மின் கட்டணங்களிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மத்திய அரசு பிஎம் சூர்ய கர் முஃப்டி பிஜ்லி யோஜனா (PM Surya Ghar Muft Bijli Yojana) என்ற பிரதமரின் இலவச சூரிய மின் திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், உங்கள் வீட்டின் மாடியில் சோலார் பேனல்களை நிறுவி, ஏசி போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் மின்சாதனங்களை மிகக் குறைந்த செலவிலோ அல்லது முற்றிலும் இலவசமாகவோ பயன்படுத்திக்கொள்ளலாம். இதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். .
மத்திய அரசின் சூரிய மின் திட்டம்
இத்திட்டத்தின் வாயிலாக, நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி வீடுகளுக்கு, மாதம் ஒன்றுக்கு 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரத்தை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைவதற்காக, வீடுகளில் சோலார் பேனல்களை நிறுவும் பயனர்களுக்கு அரசு குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்குகிறது.
இதையும் படிக்க : உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ.10,000 கோடி – பிஎஃப் தொகையை பெறுவது எப்படி?
சோலார் ஏசி எவ்வாறு செயல்படுகிறது?
வழக்கமாக, ஏர் கண்டிஷனர்கள் அதிகப்படியான மின்சாரத்தை பயன்படுத்தும் என்பதால் வீடுகளின் மாதாந்திர மின் கட்டணம் அதிகமா உயரும். ஆனால், நீங்கள் உங்கள் வீடுகளில் சோலார் பேனல்களை நிறுவியிருந்தால், மின்சாரத்துக்கு பதிலாக சூரிய சக்தியைப் பயன்படுத்தி உங்கள் ஏசியை நேரடியாக இயக்கலாம்.
பிரதான மின் விநியோகக் கட்டமைப்பிலிருந்து பெறப்படும் மின்சாரத்தையோ அல்லது சோலார் பேட்டரிகள் மூலமாகவோ ஏசியை இயக்கலாம். இதன் விளைவாக, கோடை காலங்களில் வழக்கமாக ஏற்படும் அதிகப்படியான மின் கட்டணங்கள் கிட்டத்தட்ட பூஜ்ஜிய நிலைக்குக் குறைந்துவிடும்.
அரசின் மானியங்கள் குறித்த விவரங்கள்
சோலார் பேனல்களுக்கு அதன் திறன் அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.
- அதன் படி 1 கிலோவாட்ஸ் கொண்ட சோலார் பேனல் அமைப்புக்கு ரூ.30,000 வரை மானியம் வழங்குகிறது.
- 2 கிலோ வாட்ஸ் திறன் கொண்ட சோலார் பேனலுக்கு ரூ. 60,000 வரை மானியம் வழங்குகிறது.
- 3 கிலோ வாட்ஸ் அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட சோலார் பேனலுக்கு அதிகபட்சமாக ரூ. 78,000 வரை மானியம் பெறலாம்.
உங்கள் வீட்டில் உள்ள ஏசியை சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி இயக்க நீங்கள் விரும்பினால், குறைந்தபட்சம் 3 கிலோவாட் திறன் கொண்ட ஒரு சோலார் பேனலை நிறுவுவது சிறந்தது. இந்த அமைப்பானது ஒரு நாளைக்கு சுமார் 12 முதல் 15 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இது ஏசியின் மின் தேவையை மட்டுமல்லாமல், வீட்டின் பிற மின் தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதுமானதாகும்.
சோலார் பேனல் மானியத்துக்கு விண்ணப்பிக்க தகுதி வரம்புகள்
- மத்திய அரசின் சோலார் பேனல் மானியத்துக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் சொந்தமாக ஒரு வீட்டை வைத்திருக்க வேண்டும்.
- சூரிய மின்சக்தி பேனல்களை நிறுவுவதற்குப் போதுமான இடவசதி அவரிடம் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் செல்லுபடியாகும் ஒரு மின் இணைப்பு எண்ணை வைத்திருக்க வேண்டும்.
இதையும் படிக்க : நெருங்கும் அட்சய திருதியை – நகைக் கடைகள் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் தந்திரங்கள்
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்காக மத்திய அரசின் https://solarrooftop.pmsuryaghar.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே அணுகுவதை உறுதிசெய்யவும். போலியான இணையதளங்களைப் பார்வையிடுவதையோ அல்லது மோசடிகளுக்குப் பலியாவதையோ தவிர்க்கவும்.
இணையதளத்துக்கு சென்று உங்கள் மாநிலம், உங்கள் மின் விநியோக நிறுவனத்தின் பெயர் மற்றும் உங்கள் நுகர்வோர் எண் ஆகிய விவரங்களை உள்ளிட்டுப் பதிவு செய்யவும். ‘Rooftop Solar’ பிரிவின் கீழ் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.
சோலார் பேனல் நிறுவும் பணிகள் நிறைவடைந்து, ‘நெட் மீட்டரிங்’ (Net Metering) செயல்முறையும் முழுமையாக முடிவடைந்த பிறகு, மானியத் தொகையானது நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தின் வாயிலாக, இலவச மின்சாரம் கிடைப்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்குப் பெரிதும் நன்மை பயக்கும் சூரிய ஆற்றலின் பயன்பாட்டையும் அதிகரிக்க முடியும். ஏசி அதிக அளவில் பயன்படுத்துவோருக்கு, இத்திட்டம் உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.