பெர்சனல் லோன் வாங்கப்போறீங்களா? – ரிசர்வ் வங்கியின் புது விதிகளை தெரிஞ்சுக்கோங்க!
RBI's New Loan Guidelines : திருமணம், மருத்துவ செலவுகள், தொழிலில் இழப்புகள் போன்ற நேரங்களில் உடனடி நிதி தேவைகளை தீர்க்க பெர்சனல் லோன் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்ய, ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கடன்களை முறையாக வழங்க புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் திருமணம் (Marriage), திடீர் மருத்துவ செலவுகள், தொழிலில் ஏற்படும் பொருளாதார இழப்புகள் என இப்படி எப்போதும் மக்களுக்கு பொருளாதார தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. அந்த நேரங்களில் மக்களுக்கு பெரும்பாலும் பெர்சனல் லோன் (Personal Loan) கைகொடுத்துவருகின்றன. அதிக வட்டி போன்ற சிக்கல்கள் இருந்தாலும் மக்களின் உடனடி தேவையை பெர்சனல் லோன் தீர்த்துவைக்கின்றன. இந்தியா பொதுத்துறை வங்கிகள், தனியார் நிறுவனங்கள் பெர்சனல் லோன் வழங்கி வருகின்றன. மேலும் தற்போது நிறைய லோன் ஆப்கள் வாடிக்கையாளர்களுக்கு நிமிடங்களில் லோன் தருகின்றன. அதற்கேற்ப அந்த ஆப்கள் கடனை வசூலிக்கும் முறையும் கடுமையாக இருக்கின்றன.
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மே 8, 2025 அன்று அறிவித்த டிஜிட்டல் முறையில் கடன் பெறுவதற்கு சில வழிகாட்டுதல்களை அறிவித்திருக்கிறது. பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறுவது தொடர்பாக கடந்த ஏப்ரல் 26, 2025 அன்று ரிசர்வ் வங்கி கருத்து கேட்டிருந்தது. இந்த நிலையில், பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி டிஜிட்டல் முறையில் கடன் வழங்குவது தொடர்பாக புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் புதிய விதிமுறைகள்
- கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் தொகை, கடனை திருப்பி செலுத்த வேண்டிய காலம், வட்டி விகிதம், மாத தவணை, அபராத கட்டணங்கள் போன்ற கடன் விவரங்கள் அனைத்தையும் ஒரே தெளிவான டிஜிட்டல் வடிவில் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும்.
- தங்களுக்கான சிறந்த கடனை பெறுவது தொடர்பாக கடன் விண்ணப்பதாரர் உறுதியான முடிவு எடுக்க உதவத் தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும் தரப்பட வேண்டும்.
- பல கடன் வழங்கும் நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் கடனுக்கான சலுகைகளை ஒரே இடத்தில் பார்க்கும் வசதியை வழங்க வேண்டும் என இந்த ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை அறிவுறுத்துகிறது. இதனால் கடன் பெற விண்ணப்பிக்கும் போது, கடனை தேர்ந்தெடுக்கும் நேரம் குறைந்து விரைவாக தேர்வு செய்ய முடிகிறது. மேலும் Annual Percentage Rate என்பதை ஒப்பிட்டு, வட்டி விகிதம் குறைந்த கடனை தேர்வுசெய்ய உதவுகிறது.
- கடன் பெறுபவர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக நீங்கள் கடன் பெற முயற்சிக்கும்போது அளிக்கப்படும் தகவல்கள் பாதுகாக்கப்படும்.
- Dark Patterns போன்ற மோசமான முறைகளைப் பயன்படுத்தி கடன் பெறுபவர்களை தவறாக வழிநடத்தவோ அல்லது ஒரு குறிப்பிட்ட கடனை தேர்வு செய்ய தூண்டக்கூடாது.
ரிசர்வ் வங்கியின் இந்த புதிய வழிமுறைகள் லோன் ஆப்கள் போன்ற டிஜிட்டல் வழியாக பெர்சனல் லோன் பெறுவது தொடர்பாக நம்பகத்தன்மை, தெளிவு, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்கிறது. இதனால் கடன் பெறுபவர்கள் நம்பிக்கையுடன் கடன் பெறலாம்.