ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Kalaignar Magalir Urimai Thogai Scheme | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, ஜூலை 15, 2025 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் (Kalaignar Magalir Urimai Thogai Scheme) புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை 15, 2025 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) அறிவித்துள்ளார். 2025, ஜூலை இரண்டாவது வாரம் முதல் தமிழ்நாடு முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும், அதில் பெண்கள் தங்களது மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை வழங்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் – புதிய பயனர்களை இணைக்கும் பணி தீவிரம்
தமிழகத்தில் 2023 செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தற்போது வரை ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் மொத்தம் இரண்டு கோடியே 16 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், மீதமுள்ள பயனர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவது குறித்து சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விடுபட்டவர்களுக்கு விரைவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, ஜூன் முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
சட்டப்பேரவையில், கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்#TNAssembly pic.twitter.com/KOf34SAW8d
— DMK (@arivalayam) April 25, 2025
அவரின் அறிவிப்பின்படி 2025, ஜூன் தொடக்கத்திலிருந்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விண்ணப்பங்கள் பெறப்பட்டு விரைவில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என தகவல் வெளியாகிறது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஜூலை 15, 2025 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் – முதலமைச்சர்
13+ அரசுத் துறைகள், 40+ சேவைகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள், மருத்துவ முகாம்களுடன்…
தமிழ்நாடெங்கும் 10 ஆயிரம் இடங்களில், உங்கள் ஊரில் உங்களைத் தேடி வரும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள்!
ஜூலை 15 முதல் #UngaludanStalin! pic.twitter.com/ZgctfuuUdT
— M.K.Stalin (@mkstalin) June 16, 2025
நேற்று (jஜூன் 16, 2025) தஞ்சாவூர் அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 2025 ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும் என்றும், இந்த முகாம்களில் பெண்கள் தங்கள் கலைஞர் மகளை உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை வழங்கலாம் என்றும் கூறியுள்ளார். அவ்வாறு அளிக்கப்படும் விண்ணப்பங்களின் மீது 45 நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.