AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அமெரிக்காவின் செயலுக்கு நிச்சயம் பழிவாங்குவோம் – ஈரானின் புதிய உயரிய தலைவர் மொஜ்தபா காமெனி உறுதி

Persian Gulf பகுதியில் கப்பல் போக்குவரத்து மற்றும் ஆற்றல் கட்டமைப்புகளை குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு பதிலாக உலக பொருளாதாரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களை தாக்குதலை நிறுத்த வைக்க முயற்சிக்கிறது என கூறப்படுகிறது.

அமெரிக்காவின் செயலுக்கு நிச்சயம் பழிவாங்குவோம் –  ஈரானின் புதிய உயரிய தலைவர் மொஜ்தபா காமெனி உறுதி
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 12 Mar 2026 21:13 PM IST

மார்ச் 12, 2026: ஈரானின் புதிய உயரிய தலைவர் மொஜ்தபா காமெனி,  பதவியேற்ற பிறகு வெளியிட்ட முதல் அறிக்கையில், அமெரிக்காவுக்கு எதிரான அழுத்தமாக Strait of Hormuz தொடர்ந்து மூடப்பட்டே இருக்க வேண்டும் என்றும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். காமெனியின் இந்த அறிக்கை வியாழக்கிழமை அரசு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மூலம் வாசிக்கப்பட்டது. அவர் நேரடியாக காமெராவில் தோன்றவில்லை.

பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவ தளங்கள் தொடர்ந்து செயல்பட்டால் அவை தாக்குதலுக்குள்ளாகலாம் என்றும் அவர் எச்சரித்தார். “அந்த ராணுவ தளங்களை விரைவாக மூடுவது நல்லது. அமெரிக்கா பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்தும் என்ற கூற்று ஒரு பொய்யாக இருந்தது என்பதை அவர்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள்,” என அவர் கூறினார்.

போரில் உயிரிழந்தவர்களுக்கு பழிவாங்குவோம் என்றும், எதிரிகளிடமிருந்து இழப்பீடு பெறுவோம் என்றும் ஈரான் தலைவர் தெரிவித்தார். அவர்கள் இழப்பீடு வழங்க மறுத்தால், “அவர்களின் சொத்துக்களிலிருந்து எடுத்து விடுவோம் அல்லது அதே அளவிற்கு அழித்துவிடுவோம்” என்றும் அவர் கூறினார்.  “இந்த பழிவாங்கலின் ஒரு பகுதி ஏற்கனவே நடந்துவிட்டது. ஆனால் அது முழுமையாக நிறைவேறும் வரை இது எங்களின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகவே இருக்கும்,” என்றார்.

தந்தை ஆயத்துல்லா அலி காமெனியைப் பற்றி

ஈரான் ஒருபோதும் பின்வாங்காது என்றும், முழு சக்தியுடன் எதிர்த்து போராடும் என்றும் அவர் தெரிவித்தார். போரில் உயிரிழந்த ஒவ்வொரு ஈரான் குடிமகனுக்கும் மட்டுமல்லாமல், தனது தந்தையான Ali Khamenei அவர்களின் மரணத்திற்கும் பழிவாங்குவோம் என அவர் கூறினார்.

தந்தையின் மரணம் குறித்து பேசும்போது, அவர் எப்போதும் உண்மையைப் பேசுபவர் என்றும் உயர்ந்த குணநலன்கள் கொண்டவர் என்றும் கூறினார். தந்தை காட்டிய பாதையிலேயே தாம் தொடர்ந்து செல்வேன் என்றும் தெரிவித்தார். “வீரச்சாவடைந்தவர்களின் இரத்தத்திற்கான பழியை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம்,” என்றும் அவர் தெரிவித்தார். மேலும் லெபனான், ஈராக் மற்றும் யேமன் போன்ற நாடுகளில் உள்ள ஈரானின் கூட்டணி ஆயுத அமைப்புகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

“‘Resistance Front’ எனப்படும் எதிர்ப்பு முன்னணியின் போராளிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்,” என அவர் கூறினார். இதில் யேமனில் உள்ள ஹூதி அமைப்பு, லெபனானின் ஹெஸ்பொல்லா மற்றும் ஈராக் கூட்டணி குழுக்கள் அடங்கும்.

போரை நிறுத்த ஈரானின் மூன்று நிபந்தனைகள்:

அதே நாளில் ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடைபெற்று வரும் மோதலை முடிக்க மூன்று நிபந்தனைகளை முன்வைத்தார்.

ஏதேனும் தீர்வு அமல்படுத்தப்பட வேண்டுமெனில்

  • ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்

  • எதிர்காலத்தில் மீண்டும் தாக்குதல் நடைபெறாது என்ற உறுதி வழங்கப்பட வேண்டும்

  • போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்

என அவர் கூறினார்.

ஈரானின் ‘பொருளாதார பழிவாங்கல்’:

Persian Gulf பகுதியில் கப்பல் போக்குவரத்து மற்றும் ஆற்றல் கட்டமைப்புகளை குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு பதிலாக உலக பொருளாதாரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களை தாக்குதலை நிறுத்த வைக்க முயற்சிக்கிறது என கூறப்படுகிறது.

பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த போரில், பாதுகாப்பு உத்தரவாதம் கிடைக்கும் வரை தாக்குதல்கள் தொடரும் என்றும் ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதனால், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் அல்லது அமெரிக்கா வெற்றியை அறிவித்தாலும் கூட இந்த மோதல் உடனடியாக முடிவடையாமல் தொடரும் வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

Follow Us