ஆன்லைன் மோசடியில் கோல்டன் ஹவர் என்றால் என்ன? எப்படி புகார் அளிக்க வேண்டும்?
Golden Hour in Online Fraud : மக்களிடையே ஆன்லைன் பணப்பரிவர்ததனைகள் அதிகரித்திருக்கும் நிலையில் சைபர் குற்றங்களும் அதிகரித்திருக்கின்றன. மோசடி நடைபெற்ற குறிப்பிட்ட நேரத்திற்குள் புகார் தெரிவிக்க வேண்டும். இதனை ஹோல்டன் ஹவர் என்கிறார்கள். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் (Online) முறையில் பணப்பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனுடன் சைபர் குற்றங்களும் (Cyber Crime) அதிகரித்திருக்கிறது. ஓடிபி (OTP) கேட்டு மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்திருக்கின்றனர். மேலும் அரசு நிறுவனங்கள் பெயரில் போலி லிங்க்கை அனுப்பி பணம் பறிக்கும் செயல்களும் நடைபெற்று வருகின்றன. பலர் ஏமாற்றபட்டது குறித்து தாமதமாகவே அறிந்துகொள்கிறார்கள். அதன் பிறகு புகார் தெரிவிக்கவும் நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இது மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. மோசடி நடந்தவுடன் உடனடியாக புகார் தெரிவிப்பது அவசியம். மோசடி நடந்த பிறகு எவ்வளவு விரைவில் புகார் அளிக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கோல்டன் ஹவர் என்றால் என்ன?
நீங்கள் சரியான நடவடிக்கைகளை எடுத்தால், உங்கள் பணத்தை திரும்பப் பெறக்கூடிய நேரத்தை பொன்னான நேரம் அதாவது கோல்டன் ஹவர் என்கின்றனர். இதில் மிக முக்கியமானவை என்னவென்றால் ஆன்லைன் மோசடி நடந்த உடனேயே 30 முதல் 60 நிமிடங்கள் கோல்டன் ஹவர் என அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில், நீங்கள் விரைவாக புகார் செய்தால், சைபர் குற்றவாளிகளின் கைகளிலிருந்து உங்கள் பணத்தை காவல்துறை காப்பாற்ற முடியும்.
உடனடியாக புகார் செய்வது ஏன் முக்கியம்?
சைபர் குற்றவாளிகள் மிகவும் புத்திசாலிகள். உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்தவுடன், அவர்கள் அதை உடனடியாக வேறு பல கணக்குகளுக்கு அனுப்புவார்கள். உதாரணமாக, டெல்லியில் ஒரு மோசடி நடந்தால், சில நிமிடங்களில் அந்தப் பணம் மும்பை, புனே வழியாக கேரளாவைச் சென்றடையும். இதனால் ஒவ்வொரு கணக்கையும் கண்டுபிடிப்பது போலீசாருக்கு மிகவும் கடினம். ஆனால் நீங்கள் 5-10 நிமிடங்களுக்குள் புகார் செய்தால், காவல்துறையினர் உங்கள் கணக்கை முடக்கி, மோசடி செய்பவர்களுக்கு பணம் செல்வதைத் தடுக்கலாம்.




ஒருவர் எவ்வளவு விரைவில் புகார் செய்ய வேண்டும்?
காவல்துறை அதிகாரிகள் மற்றும் அறிக்கைகளின்படி, மோசடி 3 மணிக்கு நடந்திருந்தால், நீங்கள் 3:05 க்குள் புகார் அளிக்க வேண்டும். இதனால் 3:20 மணிக்குள் வங்கி அல்லது காவல்துறை உங்கள் கணக்கைத் தடுத்து பணத்தை பாதுகாக்க முடியும். இதன் பொருள் முதல் 5 முதல் 15 நிமிடங்கள் உண்மையான ஹோல்டன் ஹவர் என அழைக்கப்படுகிறது.
எங்கே புகார் செய்வது?
தொலைபேசியில் புகார் செய்ய, 1930 என்ற எண்ணுக்கு அழைக்கவும், இது சைபர் குற்ற உதவி எண். ஆன்லைனில் புகாரளிக்க, www.cybercrime.gov.in ஐப் பார்வையிடவும். அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று எஃப்ஐஆர் பதிவு செய்யலாம்.
மோசடி நடந்தால் பயப்பட வேண்டாம், உடனடியாக புகார் செய்யுங்கள். யாரிடமிருந்தும் தகவல்களை மறைக்க வேண்டாம். விரைவில் 1930 ஐ அழைக்கவும். சமூக ஊடகங்களில் உதவி கேட்பதற்கு முன் காவல்துறைக்குத் தெரிவிக்கவும். உங்கள் கணக்கில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனையை நீங்கள் கவனித்தால், உடனடியாக வங்கிக்குத் தெரிவிக்கவும்.