யூசர்களின் தகவல்களை திருடும் கூகுள் – ரூ.11, 740 கோடி அபராதம் விதிப்பு
Google Fined for Tracking : பயனர்களின் பிரைவசியை மீறி முக அடையாளம் மற்றும் இடம் தொடர்பான தகவல்களை அனுமதி இல்லாமல் சேகரித்ததாகக் கூறப்படும் வழக்கில் கூகுளுக்கு ரூ.11,740 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் உலக அளவில் கூகுளை பயன்படுத்தும் பயனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மாதிரி புகைப்படம்
அமெரிக்காவின் (America) டெக்ஸாஸ் மாநிலத்தில் கூகுள் (Google) மீது தொடரப்பட்ட பிரைவசி தொடர்பான வழக்கில், கூகுள் நிறுவனத்துக்கு மிகப்பெரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் லொகேஷன் தொடர்பான தகவல்கள் மற்றும் முக அடையாளங்களை அனுமதியின்றி சேகரித்ததாக கூகுள் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது 1.375 பில்லியன் டாலர் அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.11,740 கோடி என்று கூறப்படுகிறது. இந்த தகவல் உலக அளவில் கூகுள் பயன்படுத்தும் அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வழக்கின் பின்னணி
கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் சட்ட ஆலோசகர் கென் பாக்ஸ்டன், கூகுள் தனது பயனர்களின் இடம் மற்றும் முக அடையாள தகவல்களை அனுமதியின்றி சேகரித்தது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 3 ஆண்டுகள் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் கூகுளின் செயல் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதனையடுத்து நீதிமன்றம் கென் பாக்ஸ்டனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருக்கிறது.
இந்த வழக்கிலும் மேலும் மூன்று வழக்குகளுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் கூகுள் நிறுவனத்துக்கு 1.375 பில்லியன் டாலர் அபாராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன் இதை விட பெரிய அபராதத் தொகையை எந்த மாநிலமும் கூகுளிடம் பெற்றதில்லை என டெக்ஸாஸ் சட்ட ஆலோசகர் கூறியுள்ளார்.
‘இன்காக்னிடோ’ மோடிலும் கண்காணிக்கும் கூகுள்
பயனர்கள் தங்களின் பாதுகாப்புக்காக கூகுளில் ‘இன்காக்னிடோ’ முறையை பயன்படுத்துகின்றனர். இருந்த போதிலும், கூகுள் பயனர்களின் சர்ச் ஹிஸ்டரியை தொடர்ந்து கண்காணித்ததாகவும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கூகுள் அதன் பயனர்களின் பிரைவசி தொடர்பான கொள்கைகளில் மாற்றங்களை ஏற்க ஒப்புக் கொண்டுள்ளது.
சைபர் பாதுகாப்பு நிறுவனம் Surfshark வெளியிட்ட புதிய அறிக்கையின் படி, கூகுள் குரோம் புரோசர் பயனர்களின் பிரைவசியை மிகவும் மீறுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனர்களின் தொடர்புகள், நிதி விவரங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஒலி பதிவுகள் போன்ற தகவல்கள் சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் கூகுளின் மற்ற சேவைகள் (Search, Gmail, Maps) மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கூகுள் தரப்பு பதில்:
இந்த நிலையில் கூகுளின் செய்தி தொடர்பாளர் ஜோஸ் காஸ்டேடா, இந்த வழக்கு குறித்து பேசியதாவது, இது பழைய குற்றச்சாட்டுகளின் வழங்கப்பட்டுள்ள தீர்வு. இப்போது எங்களின் தயாரிப்புகளிலும் கொள்கைகளிலும் பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை முன்னுரிமை கொடுக்காமல் பயனர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் தீவிரமாக செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.
கூகுள் மற்றும் மெட்டா போன்ற டெக் நிறுவனங்கள் பயனர்களின் பிரைவசியை மீறி மக்களின் டேட்டாக்களை திருடுவது இந்த வழக்கின் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. டெக்ஸாஸை பின்பற்றி மற்ற இடங்களிலும் வழக்குகள் தொடரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் தீர்ப்பு வந்தாலும், அமெரிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் கூகுளின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரும் சவாலாக மாறக்கூடும்.