ஓடும் பேருந்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்த ஓட்டுநர்-நடத்துனர்… போலீசார் விசாரணை!
Dindigul Crime: திண்டுக்கல் மாவட்டத்தில் ஓடும் அரசு பேருந்தில் பயணித்த இளைஞர் வாசல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் ஓட்டுநர், நடத்துனர், பயணிகள் கடும் அதிர்ச்சியில் உரைந்தனர்.

திண்டுக்கல்லில் ஓடும் பேருந்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருந்து திருச்சிக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் ராமச்சந்திரன் என்பவர் ஓட்டினார். நடத்துனராக செந்தமிழ் செல்வன் என்பவர் பணியில் இருந்தார். இந்த பேருந்தில் சுமார் 22 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். பேருந்தானது, ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்த போது அதில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ஏறினார். அவர், நடத்துனர் செந்தமிழ் செல்வனிடம் திண்டுக்கலுக்கு பயண சீட்டு பெற்று விட்டு பேருந்தின் கடைசி இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். இரவு நேரம் என்பதால் பேருந்தில் அதிக அளவு கூட்டம் இல்லை. பேருந்தில் பயணித்த பயணிகளும் முன் இருக்கையில் மட்டுமே அமர்ந்திருந்தனர். இதனால், பின் இருக்கையில் அந்த இளைஞர் மட்டுமே பயணம் செய்து கொண்டிருந்தார்.
பேருந்தின் பின் பகுதியில் கேட்ட சத்தம்
நடத்துனர் செந்தமிழ் செல்வன் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கிவிட்டு பேருந்தின் முன் பகுதியில் ஓட்டுனரின் இடது புறம் உள்ள அவரது இருக்கையில் அமர்ந்து விட்டார். மேலும், இரவு நேரம் என்பதால் பேருந்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன. பேருந்தானது திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது நள்ளிரவு ஒரு மணி அளவில் ஒட்டன்சத்திரம் அருகே ரெட்டியார் சத்திரம் என்ற இடத்தில் அரசு பேருந்து வந்து கொண்டிருந்தபோது பேருந்தின் பின்பகுதியில் ஏதோ சத்தம் எழுந்தது.
மேலும் படிக்க: தமிழகத்தை உலுக்கிய மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… மார்ச் 7- இல் வெளியாகிறது தீர்ப்பு!
பேருந்து வாசல் கம்பியில் தூக்குபோட்ட இளைஞர்
உடனே, பேருந்தின் நடத்துனர் செந்தமிழ் செல்வன் எழுந்து பேருந்தில் இருந்த மின் விளக்கை ஆன் செய்துவிட்டு பின்பகுதிக்கு சென்று பார்த்தார். அப்போது, பேருந்தின் பின் பக்க வாசலில் இருந்த கம்பியில் அந்த இளைஞர் தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து தொங்கி கொண்டிருப்பது தெரிய வந்தது. இதை பார்த்த நடத்துனர் செந்தமிழ் செல்வன் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்து சத்தமிட்டனர். உடனே, ஓட்டுனர் ராமச்சந்திரன் பேருந்தை நிறுத்தினார். பின்னர், இது தொடர்பாக ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்திற்கு பேருந்தின் ஓட்டுனர் தகவல் தெரிவித்தார்.
போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை
அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபரின் சடலத்தை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பேருந்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் யார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பன உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… 12 பேர் ஜாமீன் திடீர் ரத்து… நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு!