சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து… நுரையீரலில் மண் அடைத்ததால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. ஆபத்தான நிலையில் இருவர்!
Puducherry Crime: புதுச்சேரியில் அனுமதி பெறாத சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடலில் மூழ்கி ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், இரு சிறுமிகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர்களின் நுரையீரலில் மண் அடைத்துள்ளதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரிியல் சுற்றுலா படகு கவிழ்ந்து பெண் பலி
புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரப் பகுதிகளை நவீனமாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளை படகில் கடலுக்குள் அழைத்துச் சென்று சுற்றி காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த படகுகளுக்கு சுற்றுலாத்துறை அனுமதி அளித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், சுமார் 500- க்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சில மீனவர்கள் சுற்றுலா துறையிடம் முறையான அனுமதி பெறாமல் சுற்றுலாப் பயணிகளை படகுகளில் கடலுக்குள் அழைத்து சென்று வருகின்றனர். இது தொடர்பாக, கடலோர காவல் படை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் இது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகியான விஜய் தனது குடும்பத்தினர் 8 பேருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்திருந்தார்.
கடலில் படகு கவிழ்ந்து விபத்து
அவர்கள் புதுச்சேரியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு வீராம்பட்டினத்தில் படகு சவாரி செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் உரிமம் பெறாத மீன்பிடி படகில் கடலுக்குள் சுற்றிப் பார்ப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் தேங்காய்திட்டு மாங்குரோவ் காடுகளை சுற்றி பார்த்து விட்டு வீராம்பட்டினம் கடல் பகுதியில் முகத்துவாரம் அருகே சென்றனர். அப்போது, அந்தப் பகுதியில் அதிகளவில் காற்று வீசியதன் காரணமாக, பெரிய அலைகள் எழுந்தது. இதில், அந்த படகு தாக்குப் பிடிக்க முடியாமல் எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்தது.
மேலும் படிக்க: கோடை காலத்தில் பெண்களுக்கு குளிர்ச்சியான அறிவிப்பு.. அமைச்சர் கொடுத்த அப்டேட்!
கடலில் தத்தளித்த 8 சுற்றுலா பயணிகள்
அப்போது, அந்தப் படகில் இருந்த 8 சுற்றுலாப் பயணிகள் கடலில் தவறி விழுந்தனர். உடனே, கடற்கரையில் இருந்த மற்ற மீனவர்கள் தங்களது படகுகளில் அந்த பகுதிக்கு சென்று சுற்றுலா பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், 5 ஆண்கள் மற்றும் 3 பெண்களை பத்திரமாக மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர். இதில், விஜயின் மனைவி சோனியா பரிதாபமாக மூச்சுத்திணறி உயிரிழந்தார். அவருக்கு நுரையீரலில் மண் அடைத்ததாக கூறப்படுகிறது.
தீவிர சிகிச்சையில் இரு சிறுமிகள்
இதை தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த விஜயின் மகள் சத்தீஸ்வரி, மகன்கள் சதீஷ், அஸ்வின் மற்றும் உறவினர் சஞ்சய், அவரது மனைவி சந்தியா, அனுஷ் ஆகிய 7 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சத்தீஸ்வரி மற்றும் சந்தியா ஆகியோருக்கு நுரையீரலில் கடல் மண் அடைத்துள்ளதால் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தொடர்ந்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து படகை ஓட்டி சென்ற தவமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், படத்தின் உரிமையாளர் சதீஷை தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: ரயில் பயணிகள் கவனத்திற்கு… இன்று முதல் சென்னை கடற்கரை – தாம்பரம் செல்லும் 44 மின்சார ரயில்கள் ரத்து..