துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை சென்னை வருகை!
Vice President C P Radhakrishnan Visit Chennai: துணை ஜனாதிபதி சி. பி. ராதா கிருஷ்ணன் நாளை (ஜனவரி 2) சென்னை வர உள்ளார். அங்கு அவருக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதனால், சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருந்தார். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழகத்தை சேர்ந்த சி. பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டு துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். சி. பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றதை அடுத்து, முதல் முறையாக நாளை வெள்ளிக்கிழமை ( ஜனவரி 2) சென்னை வர உள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் அவருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. அதன்படி, அன்று காலை எம். ஜி. ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவிக்கிறார்.
கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா
இதைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதிக்கான பாராட்டு விழா எம் ஜி ஆர் அறக்கட்டளை சார்பில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. விழாவுக்கு, முன்னாள் அமைச்சர் ஹண்டே தலைமை வகிக்கிறார். எம்ஜிஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏசி சண்முகம் முன்னிலை வகிக்கிறார். இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர் எம். முருகன், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மேலும் படிக்க: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 4-இல் தமிழகம் வருகை…அரசியல் பின்னணி என்ன!




கோவையில் முதல் பாராட்டு விழா
முன்னதாக அவருக்கு பாஜக மற்றும் சென்னை குடியிருபோர் நலச் சங்கம் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக அக்டோபர் மாதம் இறுதியில் கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு வருகை தந்தார். அங்கு, அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இரு முறை தள்ளிபோன பாராட்டு விழா
இதே போல, சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், இரு முறை பாராட்டு விழா நிகழ்ச்சி தள்ளி போனது. இந்த நிலையில், நாளை பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் துணை ஜனாதிபதி செல்லும் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் புதுச்சேரிக்கு வருகை தந்திருந்தார்.
பயனாளிகளுக்கு குடியிருப்புகளை வழங்கினார்
அங்கு, ராஜ்பவன் சட்டமன்ற தொகுதியில் உள்ள குமரகுரு பள்ளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டன் கீழ், கட்டப்பட்ட 216 குடியிருப்பு விடுகளுக்கான சாவியை பயனாளிகளுக்கு வழங்கினார். இதே போல, ராமேஸ்வரத்துக்கும் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் கூட்டணி மந்திரி சபை அமைய வாய்ப்பு….பிரேமலதா விஜயகாந்த்!