நாங்குநேரி இரட்டை கொலை வழக்கு.. மேலும் இருவர் கைது.. போலீஸ் அதிரடி நடவடிக்கை!
Another Two Arrested In Nanguneri Double Murder Case | திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
திருநெல்வேலி, மார்ச் 06 : திருநெல்வேலியை நடுங்க வைத்த நாங்குநேரி இரட்டை கொலை சம்பவ வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது காவல்துறை மேலும் இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த கொடூர இரட்டை கொலை சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
டீக்கடை முன்பு சரமாரி தாக்குதல் நடத்திய கும்பல்
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அடுத்த பெரும்பத்து கிராமத்தில் உள்ள டீக்கடை முன்பு மார்ச் 02, 2026 அன்று இரவு ஒரு குழுவினர் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று, திடீரென அரிவாளால் அங்கிருந்தவர்களை வெட்டியுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் ஜான் என்ற 42 வயது நபர் மற்றும் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரிநாத் கட்டா என்ற 50 வயது நபர் ஆகியோர் பரிதாபமாக பலியாகினர்.
இதையும் படிங்க : இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள்… இருவரை கைது செய்த கடலோர காவல் படை!
முதற்கட்டமாக 7 பேரை கைது செய்த போலீசார்
இது தவிர நெல்சன், கணேசன், பிரபாகரன், ராமசாமி மற்றும் சகிகுமார் ஆகியோர் இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த கொலை சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் 7 பேரை கைது செய்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் நடைபெற்ற தொடர் கொலை சம்பவங்களுக்கு பழி வாங்கும் நோக்கில் அவர்கள் இந்த கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : சிசிடிவியில் சிக்குவார்களா கொள்ளையர்கள்? வியாபாரிடம் 3 கிலோ தங்கம் வழிபறி
மேலும் இரண்டு பேரை கைது செய்த போலீஸ்
இந்த கொலை சம்பவத்தின் கைது செய்யப்பட்ட அனைவரும் 19 வயது முதல் 23 வயது உடைய இளைஞர்கள். இவர்கள் பல நாட்களாக திட்டமிட்டு இந்த கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி, கொலை செய்துவிட்டு வேகமாக தப்பிச் செல்ல சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விலை உயர்ந்த பைக்குகளையும் திருடியுள்ளனர். ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தறோது மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இரண்டு பேரும் இரட்டை கொலை சம்பவத்திற்கு உடந்தையாக செயல்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல கொலை சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகளை வெளியிட்ட இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.