தவெக 3வது ஆண்டு தொடக்க விழா.. முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் விஜய்?
TVKs 3rd anniversary celebration: கட்சியின் 3ம் ஆண்டு தொடக்க விழா இன்று காலை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. ஆண்டு விழாவையொட்டி, கட்சி அலுவலக வளாகத்தில் விஜய் கட்சி கொடி ஏற்றி வைக்கிறார். இதில், 2026 தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக தலைவர் விஜய்
சென்னை, பிப்ரவரி 02: தவெக 3ம் ஆண்டு தொடக்க விழா இன்று காலை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து, கட்சியின் உள்கட்டமைப்பு பலப்படுத்துதல், புதிய உறுப்பினர் சேர்க்கை கட்சியின் கொள்கை மற்றும் திட்டங்களை விஜய் அறிவித்தார். பின்னர் கட்சியின் முதல் மாநில மாநாடு விஜய் தலைமையில் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக் கணக்கான தொண்டர்கள் திரண்டனர். இதனால் விக்கிரவாண்டி மாநாடு வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக ஒட்டு மொத்த அரசியல் கட்சியினரையும் திரும்பி பார்க்க வைத்தது. கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே விஜய், பெருமளவில் தமிழக மக்களின் கவனத்தையும் பெற்றார்.
மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய் செய்தியாளர்கள் சந்திப்பு…எப்போது தெரியுமா..அருண் ராஜ் கூறிய பதில்!
அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்திய விஜய்:
தொடர்ந்து, அக்கட்சியின் 2வது மாநில மாநாடு மதுரையில் நடந்தது. தென் மாவட்டத்தில் நடந்த இந்த மாநாடு அரசியல் கட்சிகளை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் உற்று நோக்க வைத்தது. மாநாட்டில் விஜய்யின் அதிரடி பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கட்சி தொடங்கிய பின்னர் சந்திக்க இருக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பல்வேறு வியூகங்கள் அமைத்து விஜய் செயல்படுத்த தொடங்கினார். அவ்வாறு தமிழகம் முழுவதும் தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை அறிவித்தார். முதற்கட்ட சுற்றுப்பயணத்தை திருச்சியில் தொடங்கிய விஜய் அடுத்ததாக அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர் ஆகிய மாவட்டங்களில் நேரடியாக பிரசாரம் செய்தார். அவர் பிரசாரம் சென்ற இடங்களில் எல்லாம் லட்சக்கணக்கானோர் திரண்டு வந்தனர்.
கரூர் துயரச் சம்பவத்தால் முடங்கிய தவெக:
இப்படி, பரப்பாக இயங்கி கொண்டிருந்த அவருக்கு பெரும் இடியாக அமைந்தது தான் கரூர் துயர சம்பவம். கரூரில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, கூட்டநெரிசலில் சிக்க 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த துயரில் இருந்து மீள முடியாத அவர், ஒரு மாததத்திற்கு எந்தவித அரசியல் செயல்பாடுகளும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தார். தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சென்னை அழைத்து வந்து ஆறுதல் தெரிவித்த பின், மீண்டும் தனது அரசியல் செயல்பாடுகளை தொடங்கினார்.
கூடுதல் பலம் பெற்ற தவெக:
தொடர்ந்து, தேர்தல் நெருங்குவதால் 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்து முதல் கட்ட பூத் கமிட்டி மாநாட்டை கோயம்புத்தூரில் நடத்தினார். இது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு செயலியும் கட்சி சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் கட்சி நிர்வாகிகள் பணிகளை விஜய் நேரடியாக கண்காணித்து வருகிறார். இதனிடையே, தமிழக வெற்றி கழகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் புதிதாக இணைந்தனர். இதன் மூலம் அக்கட்சி கூடுதல் பலம் பெற்றது.
மேலும் படிக்க: திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதில் சந்தேகம்?…புயலை கிளப்பிய மல்லை சத்யா!
3வது ஆண்டில் தவெக:
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.
முதன்மை அரசியல் சக்தியாகப்…
— TVK Vijay (@TVKVijayHQ) February 2, 2026
இந்நிலையில், கட்சியின் 3ம் ஆண்டு தொடக்க விழா இன்று காலை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. ஆண்டு விழாவையொட்டி, கட்சி அலுவலக வளாகத்தில் விஜய் கட்சி கொடி ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்துகிறார். அடுத்ததாக பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சயில் பேசவுள்ள விஜய், 2026 தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.