கணவன் – மனைவி சண்டை.. ஆத்திரத்தில் மாமியாரின் கை விரலை கடித்து துப்பிய மருமகன்!
Man Bites Mother-in-Law's Finger | திருநெல்வேலியில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், மனைவியை சமாதானம் செய்ய கணவன் சென்ற நிலையில், இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் எழுந்துள்ளது.

மாதிரி புகைப்படம்
திருநெல்வேலி, ஆகஸ்ட் 19 : திருநெல்வேலியில் (Tirunelveli) மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் குறுக்கே வந்த மாமியாரின் கை விரலை மருமகன் கடித்து துப்பிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மனைவி தனது தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில், மனைவியை சமாதானம் செய்ய சென்றபோது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு குறுக்கே மாமியார் வந்த நிலையில், ஆத்திரமடைந்த மருமகன் இத்தகைய கொடூர செயலை செய்துள்ளார்.
மாமியாரின் கை விரலை கடித்து துப்பிய மருமகன் – அதிர்ச்சி சம்பவம்
திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். 33 வயதாகும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தங்கலட்சுமி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கொஞ்ச நாட்கள் அவர் அங்கேயே தங்கியுள்ளார்.
இதையும் படிங்க : குருவி கூட்டை எடுக்க சென்ற சிறுவன்.. மின்சாரம் தாக்கி பலியான சோகம்!
விபரீதத்தில் முடிந்த சமாதான பேச்சுவார்த்தை
இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 18, 2025) காலை தங்கலட்சுமி தனது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்காக அங்கு உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்து துரைராஜ் தனது மனைவியிடம் பேசி உள்ளார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எனவே செல்போன் மூலம் தனது தாயை தொடர்பு கொண்டு பேசிய தங்கலட்சுமி, நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே அவரது தாய் பேச்சியம்மாள் பேருந்து நிலையத்திற்கு ஓடிவந்துள்ளார். அப்போது அவர் கணவன் – மனைவி நடந்த வாக்குவாதத்தை தடுத்துள்ளார்.
இதையும் படிங்க : Madurai: மகள் காதல் திருமணம்.. மாப்பிள்ளை கார் ஏற்றி கொலை.. மதுரையில் பகீர் சம்பவம்!
இந்த நிலையில் மாமியாரை கண்டதும் துரைராஜ் மேலும் ஆத்திரம் அடைந்துள்ளார். இதன் காரணமாக மூன்று பேருக்கும் இடையே மாறி மாறி வாக்குவாதம் நடந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரம் அடைந்த துரைராஜ் தனது மாமியாரின் கையைப் பிடித்து இழுத்து அவரது கைவிரலை கடித்து துப்பியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடும் ரத்தப்போக்கில் கைவிரல் கிழிந்த நிலையில் பேச்சியம்மாள் அலறி துடித்துள்ளார். உடனடியாக பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.