குடிப்பதற்கு பணம் தரமாட்டாயா… என்ன செய்கிறேன் என்று பார்… மகன் செய்த பகீர் சம்பவம்!
Thoothukudi Crime: தூத்துக்குடி மாவட்டத்தில் குடிப்பதற்கு பணம் தர மறுத்த தாயை பெற்ற மகன் அரிவாள் மனையால் சரமாரியாக வெட்டியதுடன், தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தார். இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து அந்த நபரை கைது செய்தனர்.

கயத்தாறில் பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த மகன்
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, பாக்கியம் தம்பதி. இவர்களது மகன் வேலுச்சாமி ( 32 வயது). இவருக்கு இசக்கியம்மாள் என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி குழந்தை உள்ளது. இந்த நிலையில், வேலுச்சாமி மீது தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் 1 ஆண்டு சிறையில் இருந்து வந்த வேலுச்சாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார். இதனிடையே, வேலுச்சாமியின் நடத்தையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி இசக்கியம்மாள் கேட்டதற்கு, தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், வேலுச்சாமி மற்றும் அவரது மனைவி இசக்கியம்மாள் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மது குடிப்பதற்கு தாயிடம் பணம் கேட்ட மகன்
இதில், கணவர் வேலுச்சாமியுடன் கோபித்து விட்டு, இசக்கியம்மாள் தனது குழந்தையுடன் புதுக்குடியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதனால், வேலுச்சாமி கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த வேலுச்சாமி மது பழக்கத்திற்கு மேலும் அடிமையானதாக தெரிகிறது. அப்போது, தனது தாய் பாக்கியத்திடம் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.இதே போல, நேற்று திங்கள் கிழமை வீட்டில் இருந்த தனது தாய் பாக்கியத்திடம் குடிப்பதற்கு வேலுச்சாமி பணம் கேட்டதாக தெரிகிறது.
மேலும் படிக்க: அதிகாலையில் கிணற்றுக்குள் பாய்ந்த கார்… நீருக்குள் மூச்சு திணறி 3 வழக்கறிஞர் பலி… கிரிவலம் சென்று திரும்பிய போது சோகம்!
தாயை அரிவாள்மனையால் வெட்டிய மகன்
அப்போது, குடிப்பதற்கு பாக்கியம் பணம் தர மறுத்துள்ளார். இதனால், கோபமடைந்த வேலுச்சாமி தனது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வேலுச்சாமி வீட்டில் இருந்த அரிவாள் மனையால் தனது தாய் என்றும் பாராமல் பாக்கியலட்சுமியை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில், நிலைகுலைந்த பாக்கியலட்சுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். அப்போதும், ஆத்திரம் தீராத வேலுச்சாமி அருகில் கிடந்த கல்லை எடுத்து பாக்கியலட்சுமி தலையில் போட்டாராம்.
ஆத்திரம் தீராமல் தலையில் கல்லை தூக்கி போட்ட மகன்
இதில், பாக்கியலட்சுமி தலையில் பலத்த காயமடைந்து மயங்கி கிடந்தார். இந்த சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் வருவதைப் பார்த்த வேலுச்சாமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர், பாக்கியலட்சுமியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பாக்கியலட்சுமி பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த வேலுச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: நடுவானில் விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறல்.. மது போதையில் திமுக கவுன்சிலர்-வக்கீலின் ஒழுங்கீன செயல்!