Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

4வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்.. சாலை மறியலில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக கைது..

School teachers Protest: நேற்றைய தினம் கையில் பதாகைகள் ஏந்தியும், மாநில அரசை கண்டித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து, போலீஸார் அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்துவிட்டு, பின்னர் மாலையில் விடுவித்தனர். 4வது நாளாக இன்றும் தொடரும் போராட்டம்.

4வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்.. சாலை மறியலில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக கைது..
இடைநிலை ஆசிரியர்கள் கைது
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 29 Dec 2025 12:21 PM IST

சென்னை, டிசம்பர் 29: ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் கடந்த 3 நாட்களாக சென்னை முழுவதும் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்தவகையில், இன்று 4வது நாளாக சென்னை காமராஜர் சாலையில் எழிலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, பதற்றமான சூழலும் நிலவியது. தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை கலைந்துச்செல்லும் படி போலீசார் எச்சரித்தனர். எனினும், அவர்கள் கலைந்துச் செல்லாததால், போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.

இதையும் படிக்க: திருப்பூரில் திமுக மகளிரணி மாநாடு.. திரளும் 2 லட்சம் பெண்கள்.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

ஆசிரியர்கள் போராட்டம் ஏன்?

கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்பட்டது. ஆனால், அதே ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் மட்டுமே வழங்கப்பட்டது. தொடக்கத்தில் இந்த ஊதிய முரண்பாடு ரூ.3,170 என்று இருந்த நிலையில், இப்போது ரூ.16,000 என்கிற அளவில் மாறியிருக்கிறது.

இந்த ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று, ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 2018ல் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவளித்தார். 2021ல், திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த முரண்பாடு களையப்படும் என்றும் கூறியிருந்தார். திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 311ல் இது குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை எதுவும் நடக்கவில்லை.

சென்னையில் 3 நாட்களாக தொடரும் போராட்டம்:

இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி சென்னையில் கடந்த 3 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் 26ஆம் தேதி பள்ளிக்கல்வி இயக்குநரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதன்பின்னர், டிசம்பர் 27ல் எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.

இதைத்தொடர்ந்து, நேற்று (டிசம்பர் 28) நேற்று சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தங்கள் குழந்தைகளுடன் தர்ணா நடத்தினர். அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தியதால் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் தொடர்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கையில் பதாகைகள் ஏந்தியும், மாநில அரசை கண்டித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து, போலீஸார் அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்துவிட்டு, பின்னர் மாலையில் விடுவித்தனர்.

இதையும் படிக்க : தவெக போட்டியிடும் சின்னம் எது தெரியுமா? வெளியானது முக்கிய அப்டேட்…கட்சியினர் குஷி!

சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது:

இந்தநிலையில், 4வது நாளாக இன்று சென்னை காமராஜர் சாலையில் எழிலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, பதற்றமான சூழலும் நிலவியது. தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை கலைந்துச்செல்லும் படி போலீசார் எச்சரித்தனர். எனினும், அவர்கள் கலைந்துச் செல்லாததால், போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.