Rajya Sabha Elections 2025: முதல்முறையாக மாநிலங்களவையின் எனது குரல்.. முதல்வரிடம் வாழ்த்துக்குபின் கமல்ஹாசன் பேச்சு!

DMK Announces Rajya Sabha Nominees: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக, 6 ராஜ்யசபா இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ஏ.ரொக்கையா மாலிக் ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர். மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கமல்ஹாசன் போட்டியிட உள்ளார். ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. கமல்ஹாசன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Rajya Sabha Elections 2025: முதல்முறையாக மாநிலங்களவையின் எனது குரல்.. முதல்வரிடம் வாழ்த்துக்குபின் கமல்ஹாசன் பேச்சு!

முதல்வர், துணை முதல்வருடன் கமல்ஹாசன்

Published: 

30 May 2025 14:44 PM

சென்னை, மே 30: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் கடந்த 2025 மே 28ம் தேதி 6 மாநிலங்களவை இடங்களுக்கான 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலுக்கான 3 வேட்பாளர்கள் பெயரை அறிவித்தது. அதேபோல், மேலும் ஒரு இடத்திற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் (Makkal Needhi Maiam) தலைவருமான கமல்ஹாசனுக்கு (Kamal Haasan) ஒதுக்கியது. இது தொடர்பாக, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “தற்போதைய திமுக எம்பி வில்சன் மீண்டும் மாநிலங்களவை எம்பியாக பரிந்துரைக்கப்படுகிறார். அதை தொடர்ந்து, எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா என்று அழைக்கப்படும் ஏ.ரொக்கையா மாலிக் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்கள்.

முன்னர் ஒப்புக்கொள்ளப்பட்டபடி, மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். இந்தநிலையில், திமுக சார்பில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை சீட்டு ஒதுக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்து பெற்றார்.

கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பு:

இதை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்ததன் பேரில் மாநிலங்களவையில் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, எங்கள் கட்சிகளிடம் சொல்லி இருக்கிறார். நாங்கள் அதற்கான ஏற்பாடுகளை மிக விரைவாக செய்வோம். என்னுடைய குரல் தமிழ்நாட்டுக்காக எப்போதும் ஒலித்துக் கொண்டுதான் ஒருந்தது. அதன்படி, முதல்முறையாக நாடாளுமன்ற அவைக்குள் எனது குரல் ஒலிக்க உள்ளது. ” என்று தெரிவித்தார்.

மாநிலங்களவையின் எனது குரல் – கமல்ஹாசன்

தொடர்ந்து கன்னடம் குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “இது ஜனநாயக நாடு! நான் சட்டத்தையும், நீதியையும் முழுமையாக நம்புகிறேன். மேலும், நான் கர்நாடகாவையும் விரும்புகிறேன், இது உண்மை. நான் ஆந்திராவையும் விரும்புகிறேன், இதுவும் உண்மை. நான் கேரளாவையும் விரும்புகிறேன், இதுவும் உண்மை. அதன்படி, கன்னடம் பற்றி நான் தவறாக பேசி இருந்தால், மன்னிப்பு கேட்பேன், இல்லையென்றால் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.” என்றார்.

தேர்தல் எப்போது..?

தமிழ்நாட்டில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவைக்கான தேர்தல் வருகின்ற 2025 ஜூன் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 2025 ஜூன் 2ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரை நடைபெறவுள்ளது.