PMK Ramadoss: விரைவில் தீர்வு! தொண்டர்களுக்காக இதை செய்வேன்.. பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு!
PMK Internal Conflict: பாமகவில் நீண்டகாலமாக நிலவி வரும் உள் கட்சி மோதலில், ராமதாஸ் தனது மகன் அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதையடுத்து, அன்புமணி நிர்வாகிகளை சந்தித்தார். ராமதாஸ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து, கட்சி நிலைமை சீராகும் எனவும், பாஜக கூட்டணி குறித்து விரைவில் முடிவு தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சென்னை, ஜூன் 9: பாட்டாளி மக்கள் கட்சியில் (Pattali Makkal Katchi) கடந்த சில மாதங்களாக உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் (PMK Ramadoss) கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகனும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss) மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதன்பின்னர், அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் உள்ள பாமக நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களை சந்தித்து சென்னையில் பேசினார். அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களை பதவியில் இருந்து நீக்கினார். இந்தநிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். இதில், பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பு:
பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளரின் சந்திப்பின்போது, “பாட்டாளி மக்கள் கட்சியில் எல்லாம் நன்றாக போய் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் தீர்வு ஒன்று ஏற்படும். தீர்வு ஏற்படும்நேரத்தில் உங்களுக்கு நன்றி. ஏற்படும் தீர்வானது நாட்டிற்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் நல்லதாகவே அமையும். கடந்த 2 நாட்களுக்கு மேலாக செய்தியாளர்கள் எனக்கு கொடுத்த அன்பு தொல்லைக்கு நன்றி.




பாஜகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைக்குமா என்பது தொடர்பாக இப்போது என்னால் எதுவும் கூற முடியாது. அதேநேரத்தில், பாமகவின் தொண்டர்கள் எப்போதும் என் பக்கம்தான் உள்ளார்கள். என்னை ஒரு குலதெய்வமாக, கடவுளாக பார்க்கிறார்கள். அவர்கள்தான் எனது வழிகாட்டிகளும் கூட, அவர்களின் முன்னேற்றத்திற்கான நான் எதையும் செய்ய தயாராக உள்ளேன். ” என்று தெரிவித்தார்.
ராமதாஸ் கருத்து:
தமிழகத்தில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும் என அமித்ஷா சரியாக தான் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும். கூட்டணி குறித்து இப்போதைக்கு முடிவெடுக்க முடியாது. விரைவில் அதுகுறித்து தெரிவிப்போம்: பாமக நிறுவனர் ராமதாஸ் #PMK #Ramadoss pic.twitter.com/RyB8XulH5v
— Idam valam (@Idam_valam) June 9, 2025
முன்னதாக, நேற்று அதாவது 2025 ஜூன் 8ம் தேதி ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையிலான பேச்சுவார்த்தையின்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சிக்குள் அதிக அதிகாரங்களை கோருவதாகவும், அன்புமணி ராமதாஸை செயல் தலைவராக தொடருமாறு கேட்டுக்கொள்வதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், அன்புமணி ராமதாஸ் தலைவராக நீடிக்கவே விரும்புவதாகவும், தேர்தல் கூட்டணியை முடிவு செய்வதிலும், இடங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதிலும் தனது தந்தை தலைமை தாங்க அன்புமணி ராமதாஸ் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. செயல் தலைவர் பதவிக்கு முன்னர், அன்புமணி ராமதாஸ் பாமக பொதுக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.