DMDK : விஜய்யுடன் கூட்டணியா?.. தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!
Premalatha Vijayakanth Statement in Karur Press Meet | தமிழகத்தில் இன்னும் 10 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளன. அந்த வகையில் 2026-ல் தெமுதிக, தவெக உடன் கூட்டணி அமைக்குமா என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த விளக்கம் அளித்துள்ளார்.

கரூர், ஜூன் 09 : 2026 சட்டமன்ற தேர்தலில் (2026 Assembly Election) தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK – Desiya Murpokku Dravida Kazhgam), நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK – Tamilaga Vetri Kazhagam) கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் தலைவர் பிரமலதா விஜயகாந்த் பதில் அளித்துள்ளார். கரூரில் விடுதி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கரூரில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு நிறைவேற்றப்பட்ட இடங்கள் தீர்மானத்திற்கு நாங்கள் வரவேற்பு அளித்தது அரசியல் நாகரீகம். 234 தொகுதிக்கும் இரண்டு நாட்களில் கூட்டம் நடத்தப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் வழங்கப்படுவது குறித்து எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதில் எந்த ஆண்டு என்பது குறிப்பிடப்படவில்லை. இந்த விஷயத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுப்பதை விட, தனது வாக்குறுதி தான் முக்கியம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களிடம் தெரிவித்துள்ளார். 2026-ல் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியா – பிரேமலதா விளக்கம்
தொடர்ந்து பேசிய பிரேமலதா, 2026-ல் விஜய் உடன் கூட்டணியா என்ற கேள்வியை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அது குறித்து பேசிய அவர், 2026-ல் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது தான் . அப்போதுதான் தப்பு நடந்தால் ஒரு எதிர்க்கட்சியாக சுட்டிக் காட்ட முடியும் என்று கூறினார். கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை, 24 மணி நேரம் மது விற்பனை, கள்ள லாட்டரி விற்பனை கனிமவள கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.