Operation Sindoor: பயங்கரவாதிகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி.. இந்திய இராணுவம் பலம் குறித்து பேசிய பிரதமர் மோடி!
PM Modi Honors Chola Dynasty: பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் 1000வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு, சோழர்களின் சிறப்பான ஆட்சி, இராஜதந்திரம், வர்த்தக உறவுகள், மற்றும் ஆபரேஷன் சிந்தூர், அன்பே சிவம், உலக வன்முறை போன்றவற்றைப் பற்றி பேசினார்.

பிரதமர் மோடி
அரியலூர், ஜூலை 27: பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) இன்று அதாவது 2025 ஜூலை 27ம் தேதி தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரம் (Gangaikonda Cholapuram) கோயிலில் நடைபெற்ற சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது, ராஜ ராஜ சோழனின் (Raja Raja Cholan) உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டு சோழர்களின் ஆட்சிகாலம் குறித்து பேசினார். அதில், சோழ மன்னர்கள் இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியா வரை தங்கள் இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தியது குறித்தும், ஆபரேஷன் சிந்தூரில் இந்திய இராணுவத்தின் சிறப்பான செயல்பாடு குறித்தும் பேசினார்.
சோழப் பேரரசு குறித்து பெருமையாக பேசிய பிரதமர் மோடி:
பிரதமர் நரேந்திர மோடி , “சோழப் பேரரசின் சகாப்தம் இந்தியாவின் பொற்காலங்களில் ஒன்று என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். சோழப் பேரரசு இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று அழைக்கும் பாரம்பரியத்தையும் முன்னெடுத்துச் சென்றது. வரலாற்றாசிரியர்கள் ஜனநாயகத்தின் பெயரில் பிரிட்டனின் மாக்னா கார்ட்டாவைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, சோழப் பேரரசில் ஜனநாயக அமைப்பு மூலம் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மற்ற இடங்களைக் கைப்பற்றிய பிறகு தங்கம், வெள்ளி அல்லது கால்நடைகளைக் கொண்டு வந்த பல மன்னர்களைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம், ஆனால் ராஜேந்திர சோழன் கங்கை நீரைக் கொண்டு வந்தான். தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்டமான சிலை அமைக்கப்படும்” என்று கூறினார்.
ALSO READ: கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்.. கங்கை நீரில் அபிஷேகம்!
“நாட்டின் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டபோது, நமது சிவஆதீனத்தின் துறவிகள் அந்த வரலாற்று நிகழ்வை ஆன்மீக ரீதியாக வழிநடத்தினர். தமிழ் கலாச்சாரத்துடன் தொடர்புடைய செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. இன்றும் கூட, அந்த தருணத்தை நான் நினைவில் கொள்ளும்போது, நான் பெருமையால் நிறைந்துள்ளேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர்:
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய பிரதமர் மோடி, “இன்றைய இந்தியா தனது பாதுகாப்பை மிக முக்கியமானதாகக் கருதுகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை யாராவது தாக்கினால், அவர்களுக்கு அவர்களின் சொந்த மொழியில் எவ்வாறு பதிலளிப்பது என்பது இந்தியாவுக்குத் தெரியும் என்பதை உலகம் கண்டது. இந்த நடவடிக்கை, உலகின் எந்த இடமும் இந்தியாவின் எதிரிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பானது அல்ல என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. பாரதத்தின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தோம். நாம் வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்க ஒற்றுமையாக இருக்க வேண்டும். நிலவின் தென் துருவத்தில் இந்தியா பதித்த பகுதியை சிவசக்தி என பெயர் சூட்டினோம்.
ALSO READ: வணக்கம் சோழமண்டலம்.. ராஜராஜ சோழன் நாணயம் வெளியீட்டுக்கு பின் தமிழில் பேசிய பிரதமர் மோடி..!
உலகின் வன்முறை, சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு, தீர்வளிக்கும் பாதையை சைவ சித்தாந்தம் நமக்கு காட்டுகிறது. அன்பே சிவம் என்ற திருமூலரின் கோட்பாட்டை உலகம் முழுவதும் கடைப்பிடித்தால் பிரச்சனைகள் தானாக சரியாகும்” என்றார்.