TVK Leader Vijay: ஊழலை மறைக்கவே டெல்லி பயணம்.. முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த தவெக தலைவர் விஜய்!
NITI Aayog Meeting: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் மத்திய வரிகளில் 50% பங்கீடு கோரியுள்ளார். தற்போது 33.16% மட்டுமே பெறுவதாகவும், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூ.2,200 கோடி நிதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை, மே 25: பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தலைமையில் நேற்று அதாவது 2025 மே 24ம் தேதி நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதன்பிறகு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin), “நிதி ஆயோக் கூட்டத்தில், மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு 50 சதவீத பங்கை கோரியுள்ளோம். மத்திய அரசு வாக்குறுதியளித்துள்ள 41 சதவீதத்திற்கு எதிராக தற்போது 33.16 சதவீதம் மட்டுமே நாங்கள் பெறுகிறோம். சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் மாநிலத்திற்கு ரூ. 2,200 கோடி நிதி வழங்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இந்தநிலையில், குடும்ப சுயநலத்திற்காக மத்திய பாஜக அரசிடம் தலைவணங்கி அடைக்கலம் புகுந்ததாக திமுகவை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (TVK Vijay) கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையின் முக்கிய கருத்துகள்:
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், மாநிலத்தை ஆளுகின்ற ஊழல் கபடதாரி திராவிட முன்னேற்ற கழகம் அரசியல் எதிரி என்றும், மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க. கொள்கை எதிரி என்றும் தீர்க்கமாக அறிவித்திருந்தோம். ஆட்சியில் இருக்கும் இவ்விரு கட்சிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து சுட்டிக் காட்டியும் வருகிறோம்.
- அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே பழைய கூட்டணி மீண்டும் இணையும் போதே, தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையிலான மறைமுகக் கூட்டணி பற்றி பேசியிருந்தோம். ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும்போது, உடனடியாக அவர் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டால், அவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போல அனைத்தும் மறைக்கப்படும். அதை தற்போது நிரூபிப்பது போலவே அமைச்சர்கள் பலரைத் தொடர்ந்து தற்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிப் பயணம் அமைந்துள்ளது.
- டாஸ்மாக் ஊழல் தொடர்பாக கடந்த 2025 மார்ச் மாதம் அமலாக்கத் துறை நடத்திய ரெய்டைத் தொடர்ந்து, சமீபத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் தி.மு.க. தலைமையின் குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
தவெக தலைவர் விஜயின் எக்ஸ் பதிவு:
— TVK Vijay (@TVKVijayHQ) May 25, 2025
- டாஸ்மாக் மீதான அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடையையும் வாங்கியது. எனினும், இது நிரந்தரத் தடையல்ல என்பதால், எங்கே பேசினால் விசாரணை தடுத்து நிறுத்தப்படுமோ, அங்கே பேசியாக வேண்டிய சூழ்நிலைக்கு, வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டார். அதற்கேற்றாற்போல அமைந்தது டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.1000 கோடி ஊழல் தோண்டி எடுக்கப்பட்டால் தம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் இந்த முறை, நிதி ஆயோக் கூட்டத்தைக் காரணமாக வைத்து டெல்லி சென்றார். பிரதமரையும் வேறு தனியாகச் சந்தித்தார். தன் குடும்பத்திற்காக பிரதமர் மோடியிடம் எதுவும் பேசவில்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மனசாட்சியுடன் வெளிப்படையாகக் கூற முடியுமா?
- பா.ஜ.க.வுடன் வெளிப்படையான கூட்டணியில் இருக்கும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒருபுறம் முன்வரிசையில் நிற்கிறார். அதே முன்வரிசையில் இன்னொரு புறம், தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிற்கிறார். இதற்கு என்ன பொருள்? ஒருவருக்கு வெளிப்படைக் கூட்டணி என்பதால் முன்வரிசை. இன்னொருவருக்கு மறைமுகக் கூட்டணி என்பதால் முன்வரிசை. இதுதானே உண்மை?
- பா.ஜ.க. அரசின் வஞ்சிக்கும் போக்கைக் கண்டித்து, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்த நிதி ஆயோக் கூட்டத்தை நிராகரித்துள்ளனர்.
- எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் விடுவதும், ஆளும்கட்சியாக இருக்கும்போது கைகுலுக்கி காலில் விழுவதும்தான் இந்த கபட நாடக தி.மு.க. தலைமையின் பித்தலாட்ட அரசியல்.
- எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மன்றத்தில் தோல்வி உறுதி என்பது தி.மு.க.வுக்குத் தெரிந்துவிட்டது. வருங்காலத்தில் பா.ஜ.க.வுடன் நேரடிக் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவிற்கு தமிழ்நாட்டைச் சுரண்டிக் கொள்ளை அடித்து, அவர்களிடம் நெடுஞ்சாண்கிடையாகத் தி.மு.க. சரணாகதி அடைந்துள்ளது.
- இந்த அவலமான தி.மு.க அரசின் ஊழல் பெருச்சாளிகள் அனைவரும் தமிழ்நாட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்டு, அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தப்பட்டு தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு தமிழக வெற்றிக் கழகம் உண்மையான மக்களாட்சியை அமைக்கும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்!
என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார்.