அமைச்சர் கே.என்.நேரு மீதான முறைகேடு புகார்… 5 ஐஏஎஸ்- 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தொடர்பா? ED அறிக்கை!
Municipal Minister K N Nehru : நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1020 கோடி முறைகேடு நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத்துறை ஆதாரங்கள் அளித்துள்ள நிலையில், இதில், 6 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் மீதான புகாரில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அரசு பணி வழங்குவது, டெண்டர் உள்ளிட்டவை வழங்குவதில் ரூ.1,020 கோடி முறைகேடு நிகழ்ந்ததாகவும், இதில், அந்த துறையின் அமைச்சர் கே. என். நேருவுக்கு தொடர்பு இருப்பதாகவும், இது குறித்த முழு ஆதாரம் ஆகியவற்றை அமலாக்கத்துறை தயார் செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அப்போதைய தமிழக டிஜிபிக்கு அனுப்பி வைத்திருந்தது. இந்த ஆவணங்கள் அனைத்தும் தமிழக அரசின் கவனத்திற்கு டிஜிபி அனுப்பி வைத்திருந்தார். இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் கே. என். நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை அளித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கூறியிருந்தது. இந்த நிலையில், அந்த ஆவணங்களின் அடிப்படையில் அமைச்சர் கே. என். நேரு மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முறைகேடு புகாரில் 6 ஐஏஎஸ் – 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு
இதனால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அமைச்சர் கே. என். நேரு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆவணங்களில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள், 3 ஐபிஎஸ் அதிகாரிகள், 2 திமுக எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு எம்பி ஆகியோருக்கு முறைகேடு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “விஜய் கை காட்டுபவரே வேட்பாளர்”.. சீட் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டால் நடவடிக்கை.. தவெக எச்சரிக்கை!!
வாட்ஸ் ஆப் உரையாடல்கள் உள்ளிட்ட ஆதாரங்கள்
மேலும், இவர்கள் இடையே நடைபெற்ற வாட்ஸ் ஆப் உரையாடல்கள் மற்றும் ஒப்பந்த ஆவணங்கள் பரிமாற்றம், நகராட்சி துறையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவரின் முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவற்றை அனுப்பியது என்பன உள்ளிட்ட விவரங்கள் மற்றும் ஒவ்வொரு நபரும் எவ்வளவு பணம் அளித்துள்ளனர் என்ற விவரம் தொடர்பாக அதிகாரிகள் மத்தியில் நடைபெற்ற உரையாடல்கள் உள்ளிட்டவை ஆதாரத்துடன் அமலாக்கத்துறை அளித்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை பெற ஆலோசனை
இந்த அறிக்கையின் அடிப்படையில் தான், இந்த முறைகேடு புகாரில் அமைச்சர் கே. என். நேரு மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால், முறைகேட்டில் தொடர்புடைய மற்றும் ஆதரவாக செயல்பட்ட ஐ ஏ எஸ் அதிகாரிகள் உட்பட பலருக்கு சிக்கலை உருவாக்கி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை பெறுவதற்காக திமுக தரப்பில் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: திருச்சியில் நடக்கும் நாம் தமிழர் கட்சி மாநாடு.. 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்