மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Tirunelveli Crime : திருநெல்வேலி மாவட்டத்தில் மது போதையில் கொடூரமாக தாக்கிய மகனிடம் இருந்து தன்னை தற்காத்து கொள்வதற்காக கத்தியால் மகனின் நெஞ்சில் குத்தியதில் அவர பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகனை கொலை செய்ததாக தாய் கைது
திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே உள்ளது கிருஷ்ணாபுரம் கிராமம். இந்த பகுதியில் உள்ள தனலட்சுமி நகரை சேர்ந்தவர் கண்ணன் ( 60 வயது) . இவரது மனைவி லதா ( 56 வயது). இவர்களுக்கு மாயாண்டி ( 27 வயது) என்ற மகனும் கிருஷ்ணவேணி என்ற மகளும் உள்ளனர். கண்ணன் மற்றும் மாயாண்டி இருவரும் இணைந்து அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாயாண்டிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால், அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து தனது தாய் மற்றும் தந்தை ஆகியவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவாராம். இந்த நிலையில், வழக்கம் போல நேற்று ( மார்ச் 9 ) நள்ளிரவு மாயாண்டி அதிகளவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, மாயாண்டியிடம் அவரது தாய் லதா கண்டித்ததாக தெரிகிறது. இதில், கோபமடைந்த மாயாண்டி தனது தாயிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மகனை கத்தியால் நெஞ்சில் குத்திய தாய்
ஒரு கட்டத்தில் தனது தாய் என்றும் பாராமல் லதாவை, மாயண்டி கொடூரமாக தாக்கி உள்ளார். இதில், லதா நிலை குலைந்து கீழே விழுந்தார். அப்போதும், லதாவை மாயாண்டி தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், கீழே இருந்து எழுந்த லதா அருகில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மாயாண்டியின் நெஞ்சு பகுதியில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில், அவரது நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மாயாண்டி சரிந்து விழுந்தார். உடனே, அருகில் இருந்தவர்களை வரவழைத்து மாயாண்டியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் படிக்க: தமிழகத்தில் கடற்கரை திருமணமா… அதுவும் குறைந்த கட்டணத்திலா… அட ஆமாங்க.. தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!
ஆபத்தான நிலையில் இருந்தவர் பரிதாப பலி
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மாயாண்டியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து, மாயாண்டியின் சடலம் உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவந்திப்பட்டி காவல் ஆய்வாளர் ராபர்ட் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகனை கொலை செய்த தாயால் பரபரப்பு
மேலும், மாயாண்டியின் தாய் லதாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மது போதையில் கொடூரமாக தாக்கிய மகனிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக தாய் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: நடிகைக்கு காதல் தொல்லை.. இயக்குநர் திட்டமிட்டு படுகொலை.. இன்ஸ்டாவால் நேர்ந்த விபரீதம்!!