சென்னை, ஜூன் 3, 2026: தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த சூழலில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக சந்திப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டார். இந்த சூழலில், தமிழகத்தின் புதிய அரசு பொறுப்பேற்றதையடுத்து பல்வேறு துறைகளில் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் புதிய டிஜிபி – இன்று பதவியேற்பு:
குறிப்பாக, தமிழகத்தின் புதிய டிஜிபி பதவிக்காக ராஜீவ் குமார், சந்திப் ராய் ரத்தோர் மற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், மூவர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, மகேஷ் குமார் அகர்வால் தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் படிக்க: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் 40 டிகிரி கடந்து பதிவாகும் வெப்பநிலை.. வானிலை ரிப்போர்ட் இதோ..
தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று காலை 10.45 மணி அளவில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக காவல்துறையின் 34-வது டிஜிபியாக அவர் பொறுப்பேற்க உள்ளார்.
யார் இந்த மகேஷ்குமார் அகர்வால் ?
மகேஷ் குமார் அகர்வால் சட்டம்-ஒழுங்கு பணியில் மிகுந்த அனுபவம் கொண்டவர். இவர் 1994 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சை சேர்ந்தவர். சென்னை பூக்கடை பகுதியில் காவல்துறை ஆணையராக பணியாற்றியுள்ளார். மேலும், சென்னை போக்குவரத்து துணை ஆணையராகவும், தூத்துக்குடியில் எஸ்பியாகவும் பணியாற்றியுள்ளார். குற்றச் சம்பவங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதில் வல்லவர் எனக் கருதப்படுகிறார். சேலம் ரயில் கொள்ளை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளையும் இவர் கையாண்டுள்ளார்.
மேலும் படிக்க: திருச்சி செவிலியர் மாணவி உயரிழப்புக்கு இதுதான் காரணமா? ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றிருந்தாலும், சட்டம்-ஒழுங்கு தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. பல்வேறு குற்றச் சம்பவங்கள் தினசரி நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரற்ற நிலையில் உள்ள சூழலில், மகேஷ் குமார் அகர்வாலின் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.