திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்.. தனிநீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை..
இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, கடந்த டிசம்பர் 1ஆம் தேதி மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகளில் பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
மதுரை, மார்ச் 17, 2026: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தாண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக் கோரி ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி அரசுப்பாண்டி மற்றும் பரமசிவம் ஆகியோரும் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.
வழக்கு பின்னணி என்ன?
இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, கடந்த டிசம்பர் 1ஆம் தேதி மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகளில் பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் கோவில் செயல் அலுவலருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுகளை எதிர்த்து LPA (Letter Patent Appeal) மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
சரியான பதில் வழங்கப்படாவிட்டால் குற்றச்சாட்டு பதிவு:
அரசு தரப்பில், நீதிமன்றம் பரிந்துரைத்த 5 நபர்களை தீபத்தூணில் பூஜை செய்ய அனுமதிப்பது தொடர்பாக தேவஸ்தானம் தனது நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் கோரியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதிய நபர்கள் இணைக்கப்பட்டிருப்பது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும் கூறப்பட்டது. அதேபோல், அடுத்த முறை சரியான பதில் வழங்கப்படாவிட்டால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என கடைசி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “தீபத்தூணில் பூஜை செய்ய 5 பேரை அனுமதிப்பதில் என்ன சிக்கல்?” என கேள்வி எழுப்பினர். மேலும், “அதில் பிரச்சனை இருந்தால் தேவஸ்தானமே பூஜை நடத்தலாம். சிறிய விஷயத்தை செய்து பிற பிரச்சனைகளை தவிர்க்கலாமே. நீதிமன்ற அமர்வும் தனிநீதிபதியின் உத்தரவை உறுதி செய்துள்ள நிலையில், அந்த உத்தரவை பின்பற்றலாமே?” என கருத்து தெரிவித்தனர்.
தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை
மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முதல் உத்தரவு எப்போது பிறப்பிக்கப்பட்டது, அதன் பின்னர் எத்தனை முறை விசாரணை நடைபெற்றது, என்னென்ன உத்தரவுகள் வழங்கப்பட்டன, அதில் என்ன அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கான முழு விவரங்களையும் அரசுத்தரப்பு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.