சிலிண்டர் விலை உயர்வு.. மே 7- இல் இடதுசாரிகள் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்!
Left Parties Announce Protest : தமிழகத்தில் சிலிண்டர் விலை உயர்வு, ரயில்வே பணியிட குறைப்பு காரணமாக மத்திய அரசை கண்டித்து வருகிற மே 7- ஆம் தேதி இடது சாரி கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசை கண்டித்து இடது சாரிகள் ஆர்ப்பாட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சமையல் எரிவாயு விநியோகம் பெரிதளவில் தடைபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிப்பை சந்தித்ததுடன், அதற்கான விலையும் அதிக அளவு உயர்ந்துள்ளது. இதே போல, வீடுகளுக்கான சமையல் சிலிண்டர்கள் முன்பதிவு செய்யும் காலம் சுமார் 40 முதல் 45 நாட்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணத்தால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், சில ஹோட்டல்கள் செயல்பட்டு வந்தாலும், வணிக சிலிண்டர்களின் விலையை காரணமாக வைத்து உணவு பொருள்களின் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளனர். இதனால், பலதரப்பட்ட மக்களும் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
எல்பிஜி ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
இதே போல, எல்பிஜி-யில் ஓடும் ஆட்டோக்களுக்கான எரிவாயு விநியோகமும் பெருமளவு பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் ஆட்டோக்கள் முறையாக இயங்கவில்லை. இதன் காரணமாக, எல்பிஜி ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வணிக சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற கோரியும், ரயில்வே பணியிட குறைப்பை கைவிடக் கோரியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளன.
மேலும் படிக்க: சிலிண்டர் விலை உயர்வு.. மக்களின் துயரை எண்ணி தீர்வை காண வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்
மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்
அதன்படி, வருகிற மே 7- ஆம் தேதி ( வியாழக்கிழமை) தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் அலுவலகங்கள் முன் இடதுசாரி கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளன. தற்போது, உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட உயர்வை தொடர்ந்து, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடந்த வெள்ளிக்கிழமை ரூ.993 உயர்ந்து ரூ.3,237- க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் உணவுப்பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விடுதிகள் கட்டணங்கள் உயர்வதாக அறிவிப்பு
இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற மே 5- ஆம் தேதி முதல் விடுதிகள் கட்டணத்தை உயர்த்துவதாக விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு வணிக சிலிண்டர் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளது. கடந்த நான்கு மாதங்களில் ரூ.1,518 உயர்த்தி உள்ளது. கடந்த ஜனவரி 1- ஆம் தேதி ரூ.1,739- ஆக இருந்த சிலிண்டரின் விலை தற்போது ரூ.3,257- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. இதே போல, 5 கிலோ சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.261 உயர்த்தி உள்ளதாக இடது சாரிகள் குற்றம் சாட்டி உள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் PG விடுதி கட்டணங்கள் உயர்வு.. அதிர்ச்சியில் பேச்சுலர்ஸ்..